Thursday, May 28, 2020

புலம் பெயர்ந்த மனசு

புலம் பெயர்ந்த மனசு

வந்தபோது தெரியாது 
சொந்த ஊரை 
இவ்வளவு தூரத்தில் 
விட்டிருக்கிறோமென...

இட்டிலிக்குள் 
கறி இருப்பதைவிட 
ஆச்சரியம் தான்
ஒரே பெட்டிக்குள் 
நாங்கள் 
ஒட்டிக்கொண்டு வந்த கதை...

பான்பராக் வாயைப்
பரிகசித்த நீங்கள்
பசித்த வயிற்றைப் 
பார்த்திருக்க 
மாட்டீர்கள்...

அடுத்த வேளைக்கு
80லட்சத்தில் 
ஆடையிருந்தால் 
அழுக்கை சுமக்க 
ஆசையா எங்களுக்கு?  

இந்தி வாலாக்கள் 
என ஒதுக்குவீர்கள் 
இந்தப் பிரிவினை 
இன்னுமா நீளுகிறது 
மந்தி வாலாக...

அற்பக்கூலிக்கு 
உழைக்க வந்தவர்களா
உங்கள் 
அரிய வாய்ப்பை 
அபகரித்தது? 

கட்டிட இடிபாட்டில்
பட்ட காயத்தில் 
புரையோடி கிடக்கிறது
உழைப்புச் சுரண்டல்! 

சஞ்சீவி மலையோடு 
பெயர்த்துச்செல்லவா
முடியும்?
என் உடல்தேவைக்கு 
உயிர் சுமக்கும் 
கர்ப்பிணி மனைவியை...

கால்வலிக்குதென 
கைதூக்கச் சொல்லும் 
குழந்தையை 
எந்தக் கரத்தில் 
தூக்குவது 
மூட்டை முடிச்சுகளோடு 
சேர்த்து...

சூட்கேஸ் தூக்கியே 
பழகிய கைகள் 
எங்கள் 
சுமைகளைத் தூக்க 
எப்படி நீளும்? 

மைல் கணக்கில் 
தூரம் பார்த்த எமக்கு 
நாள் கணக்கில் 
நடக்க வேண்டியுள்ளது 
பிழைத்த இடத்திலிருந்து
பிறந்த இடத்திற்கு...

நடந்து நடந்து 
கொப்புளமாகிறது 
பாதங்களிரண்டும்...
பாதணிகளை
அரியாசனத்தில் வைத்த
அறியா சனம் நாங்கள்! 

எப்படியேனும் 
புலம் பெயரட்டும் 
ஆட்சிகள்!

No comments:

Post a Comment