Tuesday, September 8, 2020

புதிய கல்வி கொள்கை

 

கல்வி கொள்கையா? இது காவிக் கொள்கையா?
ஏழை சாதிக்கு இனி கல்வி இல்லையா?

பால்குடியை மறக்கும் முன்னே
பள்ளிக்கூடம் வரணுமா?
ஆய்கழுவப் பழகும் கையில்
அரிச்சுவடி தரணுமா?
மூன்று வகுப்பு தாண்டும் போது
பொதுத் தேர்வு வைப்பதா?
கண்விழித்துப் பார்க்கும் போது
இமை இரண்டை தைப்பதா? (கல்வி கொள்கையா)

தாய் மொழியை தள்ளிவைத்து
இந்தியைத் திணிப்பதா?
இறந்து போன சமஸ்கிருதம்
இவர்களுக்கு இனிப்பதா?
மூன்று மொழி சுமையேற்றி
பிஞ்சுகளை வதைப்பதா?
மதிப் பெண்ணை இலக்காக்கி
தனித்திறனை சிதைப்பதா? (கல்வி கொள்கையா)

மதங்கள் சொல்லும் மடத்தனத்தை
பாடங்களில் நுழைப்பதா?
அறிவியலை தவிக்க விட்டு
ஆன்மீகம் தழைப்பதா?
பொய்யும் புரட்டும் சேர்த்தெழுதி
சரித்திரத்தை திரிப்பதா?
புராணப் புளுகு மூட்டைகளை
பிஞ்சு முதுகு சுமப்பதா? (கல்வி கொள்கையா)

அப்பன் பாட்டன் செய்த தொழிலை
பகுதி நேரம் பார்ப்பதா?
அன்று ஒழிந்த குலக்கல்வி
இன்று வந்து சேர்ப்பதா?
சமூக நீதி தழைக்கத் தானே
சாதி இட ஒதுக்கீடு!
சனாதானம் வளரத் தானே
சங்கி செய்யும் குறுக்கீடு! (கல்வி கொள்கையா)

கலை அறிவியல் பாடத்துக்கும்
கடின நுழைவுத் தேர்வா?
வேலை யின்மை பிரச்சினைக்கு
குறுக்கு வழியில் தீர்வா?
சந்தை போல கல்வி முறையை
பார்க்குதடா கார்ப்ப ரேட்டு
நொந்த ஏழை சனங்களுக்கு
கையிலேது கரன்சி கட்டு? (கல்வி கொள்கையா)

சங்கம் வைத்துப் போராடும்
உரிமையினை  மறுப்பதா?
அரசு செய்யும் அடக்குமுறை
அடிமை போல பொறுப்பதா?
குரல் வளையை நெறித்திடத் தான்
காவிக் கூட்ட கூப்பாடு!
பொம்மை போல தலையை ஆட்ட
மாற்றி வைக்க ஏற்பாடு! (கல்வி கொள்கையா)

அடுக்களையில் மீண்டும் பெண்ணை
அடைக்கிறதா உயர்கல்வி?
வகுப்பறையில் சரி சமமாய்
கிடைக்கிறதா பெண்கல்வி?
காவிக் கூட்டம் தலையிடத்தான்
லோக்கல் ஹீரோ திட்டமா?
கல்வித் திட்டம் வகுப்பதென்ன
ஆர்எஸ்எஸ் இஷ்டமா? (கல்வி கொள்கையா)
  -வரத.வசந்தராஜன்
நன்னிலம்

பாஜகவை நம்பி போனா

 

பருந்து முட்டையை பாதுகாத்து
கோழிக்கென்ன லாபம்?
பாஜகவை நம்பி போனா
வாழ்க்கை கெட்டு போகும்?

ராமனுக்கு கோவில் கட்ட
கல்லைத் தூக்க சொல்லும்
சமூகநீதி பேச்செடுத்தா
கல்லெறிஞ்சு கொல்லும்!
இந்துவாக இணைய சொல்லி
இந்தி மொழியில் பேசும்!
சாதிச் சண்டை நடக்கும் போது
மௌன விரதம் இருக்கும்!  (பருந்து)

ஐபிஎஸ் வேலை விட்டு
ஆடு மேய்க்க சொல்லும்!
ஆமாஞ்சாமி போடும் வரைக்கும்
அஞ்சு பத்து தள்ளும்!
கோயபல்ஸை நகல் எடுத்து
மாரி தாஸா ஆக்கும்!
கொட்டியளந்த பொய் கதைக்கு
நாடே வாயை பொளக்கும்! (பருந்து)

ஆட்டம் போட்ட அத்வானி
அட்ரஸ் எங்க காணல
தேர்தல் முடிஞ்சா ராமனையும்
தேடி வர ஆளில்ல?
'ஜீ'யின்னு சலாம் வெக்கும்
நம்பிடாத தம்பி!
'சீ'யின்னு விரட்டும் போது
வெம்பிடாத தம்பி!          (பருந்து)

பஞ்சாமிர்த புட்டிக் குள்ள
அபினை அடைச்சு வைக்கும்
ஆளில்லாத நேரம் பார்த்து
தாலி அறுத்து விக்கும்!
தனக்குத்தானே குண்டு வீசி
விளம் பரத்தை தேடும்!
அடுத்தவனை பழியைப் போட்டு
கல வரத்தைத் தூண்டும்!     (பருந்து)

மிஸ்டு காலு கொடுத்தாலே
மெம்ப ராக சேர்க்கும்
மன்னிப்பு கடிதம் எழுதி
வாய் வீரம் காட்டும்!
தாமரையை மலர வைக்க
தலை கீழா நிக்கும்! -இந்த
தகிடுதத்தம் புரிய லன்னா
தலை முறையே திக்கும்!     (பருந்து)

-வரத.வசந்தராஜன்
நன்னிலம்

அம்பத்தாறு இஞ்ச்

 

தரையில வாத்தை ம'டக்'குன
ஆளு
தண்ணியில் முதலையை அ'டக்'குன ஆளு...
பொருளாதாரத்தை மு'டக்'குன ஆளு
பொறுத்தது போதும் ப'டக்'குனு கேளு!

அது யாரு அது யாரு? தெரியுமா?
அவர் பேரு சொல்லாம புரியுமா?

அம்பத்தாறு இஞ்சுக்கு
அகலமான நெஞ்சுக்கு
அஞ்சுகாசு அளவுக்கு
மச்சமொன்னு இருக்குதடா மச்சான் -அதானி
கச்சிதமா அளந்து தானே வெச்சான்!
    (அது யாரு )

வாயில சுட்ட வடையில
லாபம் பாக்கும் கடையில
டீ ஆத்துன கப்சா ரொம்ப ஹிட்டாச்சு -உண்மை
தெரிஞ்ச பின்னே ஏழைத்தாயை தொட்டாச்சு!   ‌‌    (அது யாரு )

கலர் கலரா உடையில
மாடல் போல நடையில
மாட்டிகிட்டு போஸ் கொடுக்கும் எளிமையை -பாத்து
பதறுதடா ஜவுளிக் கடை பொம்மையே!          (அது யாரு )

ஏத்தி விட்ட ஏணியை
எட்டி உதைக்கும் பாணிடா
பிள்ளையாரா பிடிச்சாலும் சாணி தான் -அவரு
பிடுங்குனது தேவையில்லா ஆணி தான்!           (அது யாரு )

சிசி டிவி காமிரா
பார்த்துப் புட்டா பாமரா
போனவேலை மறந்து போகும் பாரு -சேர்ந்து
செல்ஃபி எடுக்க சிலையா நிப் பாரு!
                        (அது யாரு )
-வரத.வசந்தராஜன்
  நன்னிலம்

சைவ காதல்

 காரட்டு நெறத்தழகி 

கத்தரிப்பூ சிரிப்பழகி 

சாரட்டு வண்டி பூட்டி வாரேன்டி- உன்னை

சம்மந்தம் பேசத் தான் போறேன்டி!


பூசணிக்காய் முகத்தழகி

புளியம்பிஞ்சு உதட்டழகி 

யோசனைக்கு காரணம் எதுதான்டி- நான் 

யோக்கியந்தான் சந்தேகம் உனக்கேன்டி!


கன்னத்தில் தக்காளி 

கண்ணுக்குள் குடைமிளகாய்

எண்ணத்தில் நிறைஞ்சவளே நீதாண்டி- உன்னை 

எப்படியும் மணமுடிக்கப் போறேன்டி!


பீர்க்கங்காய் கழுத்தழகி 

பீட்ரூட்டு மாரழகி

ஏக்கத்தை தீர்க்கத்தான் வாயேன்டி-  உன் 

இதயத்தில் இடமொன்னு தாயேன்டி! 


வெண்டைக்காய் விரலழகி

வெள்ளரிக்காய் கையழகி 

சண்டைக்கு இழுக்காதே பாவன்டி-நீ 

சாடையில சொல்லிபுட்டா பாய்வேன்டி!


சுரைக்காய் இடுப்பழகி 

சௌசௌ மடிப்பழகி

முறைச்சா நான் என்ன ஆவேன்டி- உன்னை 

மறந்தா மனசுக்குள் சாவேன்டி!


வாழைத்தண்டு காலழகி 

வாய்பிளக்கும் பேரழகி 

ஏழைக்கேத்த எள்ளுருண்டை நீதான்டி- உன்னை

எஜமானி ஆக்கத்தான் போறேன்டி!


-வரத.வசந்தராஜன்

  நன்னிலம்


என்னைப் பெத்த அப்பா

 உசிரா இருக்கும் வரைக்கும் 

அருமை தெரியவில்லை- அவர் 

உருவம் கண்ணுக் குள்ள 

இன்னும் மறைய வில்லை!

விலை யென்ன கேட்காம 

வாங்கிக் கொடுத்த அப்பா- அவர் 

வேதனையைத் தெரிஞ்ச அம்மா 

என்னை அதட்டி வெப்பா!


தீவாளி பொங்கலுக்கு                      துணியெடுக்கப் போனாலும்

தெனக்கூலி தீர்ந்துபோயி வட்டிவாங்கி வந்தாலும் 

ஆளுக்கு ரெண்டுசட்டை 

எடுத்துக் கொடுத்த அப்பா-அவர் 

மேலுக்குப் போட மட்டும் 

பத்து வருஷ ஜிப்பா!         (உசிரா)


எண்ணெய்தேச்சு குளிக்கவைக்க

என்னைபாடு படுத்துவாரு

கண்ணில் சீக்கா விழுந்ததுக்கு கலங்கி அவரு தவிப்பாரு

சைக்கிளு பாரில்சின்ன

சீட்டு வெச்ச அப்பா - என் 

செருப்பில் பதிஞ்ச முள்ளை 

வாயில் கடிச்ச அப்பா!            (உசிரா)


கறிசோறு சமைச்சாலும் 

எலும்பு மட்டும் கடிச்சிகிட்டு

கையால நெறடிப்பாத்து 

கறி எடுத்து நீட்டுவாரு

தொண்டைக்கு போன முள்ளை 

தோண்டி எடுத்த அப்பா -எனக்கு‌

நண்டுகால் கடிக்கும்போது 

எச்சில் பட்டா தப்பா! (உசிரா)


திருவிழா கூட்டத்துல நான்தொலைஞ்சு போவேன்னு

திண்பண்டம் வாங்கித்தந்து 

தோளில்தூக்கி வெப்பாரு 

கோபுரம் என்னைவிட 

ஒசரம் கம்மியப்பா -அந்த 

கோயிலு சாமிதானே 

என்னை பெத்த அப்பா!           (உசிரா)


-வரத.வசந்தராஜன்

நன்னிலம்.


பட்டாசு தொழிற்சாலை விபத்து

 

பயங்கர வெடி விபத்து- அதில்
பலபேர் உயிரிழப்பு
பலமுறை இப்படி காதுல கேட்டு
           பழகிடுச்சு நியூஸு- ஒன்னும்
           பதறலயே மனசு!

எரிந்தது எப்படி தீயறியும்
எதனால் என்பதை யாரறிவார்?

கந்தகத் துக்கும் பேரியத் துக்கும்
நடந்த கைகலப்போ? -இதில்
காப்பீட் டுக்காய் காரியத் துக்கம்
பூணும் சதியிருக்கோ?

ராக்கெட்டு போல உயரே‌ போகும்
ஆலை முதலாளி- பாம்பு
மாத்திரை போலே மண்ணில் கருகும்
கூலித் தொழிலாளி!

கந்தக வாடையில் கனவுகள் திரிக்கும்
கன்னிகள் எத்தனையோ?-வெடிக்
கட்டுகள் எண்ணி கணக்கு படிக்கும்
பிள்ளைகள் எத்தனையோ?

மத்தாப் பூவாய் சிரிக்க நினைத்த
ஏழைகள் கனவெல்லாம்
புஸ்வா னமாய் புகைந்து முடிந்து
போனது ஓர்நொடியில்!

சீனிச் சரமாய் நீளுது இன்னும்
வட்டிக் கடனெல்லாம் -தரைச்
சக்கரம் போல சுற்றிய வாழ்க்கை
சரிந்தது புவிமடியில்!

எத்தனை முறைஅந்த நெருப்பு குடிக்கும்
ஏழைகள் உயிரெல்லாம் -இருள்
கவிழ்ந்து கிடக்கும் குடிசைக் குள்ளே
ஈஒஎப்போ வரும்விடியல்?

வெடி மருந்தோடு வெடி மருந்தாக
சாம்பல் கலக்கிறதே -சனம்
வெந்து மடிந்த வீதியில் மீண்டும்
கட்டடம் முளைக்கிறதே!
            -வ.வசந்தராஜன்
            நன்னிலம்

ஆங்கில மோகம்

அக்கம் பக்கம் வீட்டிலுள்ள
ஆளு யாரு தெரியலே
அமெரிக்காவின் அதிபர் பேரை
பட்டுன்னு சொல்லுது பயபுள்ள!
அரிசி எப்படி வெளையுதுன்னு
அப்பன் காரன் சொல்லல
கல்லா கட்டும் ஏற்பாடுதான்
கான்வென்டு ஸ்கூலுல!

மார்க் வாங்கும் எந்திரமாக
மாணவனை மாத்துது
பணம் காய்க்கும் மரத்தைப் போல
பெத்தவனை பாக்குது
வெளி நாட்டு வேலையின்னு
ஆசை வார்த்தை காட்டுது- கள்ளச் சாராயம் வித்த ஆளை
கல்வித் தந்தை யாக்குது! (அக்கம் பக்கம்)

தாய் மொழியே தெரியவில்லை
ததிங்கினத்தோம் போடுது
ஆங்கி லத்தில் மட்டுமென்ன
அரைகுறையா தேறுது!
அய்யோ பாவம் ஆமைக்குஞ்சு
ஓட்டப்பந்தயம் ஓடுமா?
கட் டெறும்பைக் கடலில்விட்டா
கரைக்குவந்து சேருமா? (அக்கம் பக்கம்)

அரசுப் பள்ளி பிள்ளையைபாரு
அம்மாம்பேச்சு பேசுது
கான் வென்டில் படிச்சபுள்ள
அம்மாஞ்சியா முழிக்குது
நாட்டுக் கோழி வீரியம்பாரு
நரியைக்கூட துரத்துது
சிறகை வெட்டி பருந்துவளர்த்தா
கோழிகூட கொத்துது (அக்கம் பக்கம்)

அம்மா அப்பா கனவுதிணிக்க
பிள்ளை குப்பைக்கோணியா?
அவரைச் செடியில் ஆப்பிள் பழுக்க
ஆசைப் படும்பாணியா?
வெள்ளைக் காரன் மொழியைப்பேச
விரும்புறது தவறில்ல!
வெள்ளைத் தோலும் வேணுமின்னு
வெந்துபோனா சரியில்ல! (அக்கம் பக்கம்)

-வ.வசந்தராஜன்
நன்னிலம்


ஆசாரி(தச்சன்)யின் காதல்

பூவரசோ மாமரமோ -உன்
பூமேனி செம்மரமோ!
மஞ்சனத்தி உன்முகமோ
மணக்கும் சந்தனமோ!

பலமரமும் பாத்துவந்தா
ஒரு மரமும் புடிக்காது- நான்
பாத்தது ஒத்தை மரம்
பளபளக்கும் தேக்கு மரம்!

கட்டில் காலாட்டம்
கட்டழகே நீ கெடச்சே...
பட்டை பழுதும்இல்லே
பக்குவமா நீ சிரிச்சே...


 காத்துல படபடக்கும
சன்னல் கதவாட்டம் -உன்
இமைமூடி திறக்கையில
இதயம் நின்னுதுடிக்குதடி!

கடைசல் போட்டதுபோல்
கச்சிதமா ஒடம்பிருக்கு- உன்
கண்ணுமுழி ரெண்டும் என்னை
துளைபோட்டு கோக்குதடி!

இழைப்புளி இல்லாம
இழைச்ச தேகம் பாத்து- மனசு
பசையேதும் போடாம
பச்சக்குன்னு ஒட்டுதடி!

முக்காலி சடைபோட்டு
முன்னாடி நீநடந்தா- காலு
தெக்கால வடக்கால
திசைமாறி நொடிக்குதடி

சத்திரத்து நிலையைவிட
சாணளவு ஒசந்தவளே- உன்னை
உத்திரத்து தூணைப்போல
உள்ளங்கையில் தாங்குவேன்டி!

மூங்கில் ஆணிபோல
மனசுல பதிஞ்சவளே - நான்
ஏங்கித் தவிக்கிறனே
எப்போவர தாழ் போட?

-வ.வசந்தராஜன்
  நன்னிலம்.


எங்கே கடவுள்?

 கருப்போ சிவப்போ குட்டை‌ நெட்டையோ

கடவுளைத் தேடி அலையுறேன்!

ஆணோ பெண்ணோ அர்த்த நாரியோ

அருவம்தானோ குழம்புறேன்!


கடவுள் இதுவரை தென்படவில்லை

கருவறைக் குள்ளும் கண்படவில்லை

இருக்கு இல்லை என்கிற பேச்சால் 

இறைவன் மனது புண்படவில்லை!

ஊரைக்கூட்டி தேரை இழுக்கும் 

உற்சவத்துக்கும் அவன் வரவில்லை...

உரக்கக்கூவி அழைத்தபோதும் 

இரக்கப்பட்டு இறங்கவுமில்லை... (கருப்போ)


ஏழையின் சிரிப்பில் இருப்பதுமில்லை 

ஏழைகள் யாரும் சிரிப்பதுமில்லை

சிறப்பு தரிசன வரிசையில் நின்றும் 

செருப்பின் கவலை விடுபடவில்லை! 

கோவில்உண்டியில் கோடிகொட்டியும்

கோமான்வீட்டில் குடிவரவில்லை...

சேரியின்கால்கள்‌ தொடாத இடத்தில் 

சிலையின் நிழலும்‌ அடிபடவில்லை...

(கருப்போ)


தூணிலுமில்லை துரும்பிலுமில்லை!

அணுவிலுமில்லை அதனுள்ளுமில்லை!

விஞ்ஞானத்தில் புலப்படவில்லை

அஞ்ஞானத்தில் அகப்படவில்லை!

மனதின் அழுக்கை வெளுப்பதையன்றி 

மதத்தின் நோக்கம் வேறெதுமில்லை...

இன்னொரு மதத்தை வெறுப்பதையன்றி 

இறைவனை அடையும் வழியதிலில்லை... (கருப்போ)


பூசைகள் செய்தார் பார்த்ததுமில்லை

புதுப்பிக்கின்றார் பயனெதுமில்லை

ஆடம்பரமாய் விளக்குகள் கட்டி 

அலப்பறை செய்தும் அங்கேயுமில்லை...

அகன்றக்கொடியை பறக்க விட்டும்

ஆண்டவன் ஏனோ எங்கேயுமில்லை... (கருப்போ)


தேடித் தேடித் தெம்பு மில்லை 

தேடா விட்டால் வம்பு மில்லை 

நம்பித் தொலைத்தால் சங்கடமில்லை

நம்பா விட்டால் சஞ்சல மில்லை

இருப்பைச் சொல்ல சான்றுகள் இல்லை

இல்லை என்பதற் கதுதான் எல்லை! 

(கருப்போ)


விலை மகளின் வேதனை

 ஈனப்பிறவிகள் தந்திரத்தால் 

இருட்டில் இயங்கும் எந்திரம் நான்! 

மானம் பெரிதெனும் மேடைவாய்கள் 

மாலையில் ஜெபிக்கும் மந்திரம் நான்! 

கற்பை உயர்வெனக் கதையில் உரைக்கும் 

தமிழ்க்குடி பெற்ற தலைமகள்‌ நான்!

கருப்பை வழியே பிறந்த நாய்கள் 

கடித்துக் குதறிய விலைமகள் நான்!


வேலை கேட்டுப் போன இடத்தில்

சேலை இழுத்தவர் எத்தனையோ?

மாலை சூட்ட தட்சணை கேட்டால் 

மங்கையர் வாழ்வது எப்படியோ?படித்தக் கடனை கட்டும் முன்னே 

படுக்கை விரித்தவர் எத்தனையோ?

பார்ப்பவர் எல்லாம் பாதகர் என்றால் 

பத்தினி யாவது எப்படியோ? 

(ஈனப்பிறவிகள்)


வறுமை விற்று வயிறு நிறைத்தேன்

உடலை விற்பதாய் ஊர்பேச்சு! 

மாதம் மூன்றுநாள் உழைக்கா துண்பதே 

உறுத்து கிறதுஎன்‌ மனசாட்சி! 

ஆலைக் கரும்பென ஆனதென் வாழ்க்கை 

அனுதினம் பிழிபடும்‌ சக்கை!

சேலை சுமையென எடுத்தெறி ந்தாலும்

இன்னும் மேனியில் வெக்கை! (ஈனப்பிறவிகள்)


புனிதம் பேசும் புண்ணிய வானே 

தழும்புகள் எண்ணிப் பாரும்!

மனிதன் உருவில் திரியும் மிருகம் 

எத்தனை என்பதைக் கூறும்!

தினமும் என்னை துகிலுரி ந்தாரே

ஆடை கொடுப்பவன் எங்கே?

சாதியும் மதமும் சபலத்துக் தில்லை

சமத்துவ மாகுது இங்கே?

            (ஈனப்பிறவிகள்)


இரைப்பை மட்டும் திறந்து வைத்து

கருப்பை கதவை மூடினேன்

கொள்ளி வைக்கவும் பிள்ளை இல்லையே‌

கதியை எண்ணி வாடினேன்!

மரமாய் கிடப்பேன் கட்டில் மேலே 

எத்தனை உருவம் தீண்டும்?

பிணமாய் விழுந்த பின்னா லேனும்

தனியாய் படுக்க வேண்டும்!

         -வசந்தராஜன் 

           நன்னிலம்.


தாயே... மரித்தாயே

 வாடையிலும் கோடையிலும் 

என்னை வளர்த்த ஆத்தா- உன்னை 

பாடையில பாக்கணுமா 

விட்டு எழுந்து வாத்தா!

கவலையெதும் காட்டாம 

என்னை வளர்த்த ஆத்தா- இப்போ 

கலங்கிநின்னு தவிக்கிறனே 

கண்ணு துடைக்க வாத்தா!


நடைவண்டி ஓட்டும்போது 

நான் தடுக்கி விழுந்ததுக்கு

வண்டிசெஞ்ச ஆசாரியை

வசைமாரி பொழிஞ்சவ தான்- இப்போ 

சவவண்டி அலங்கரிச்சு

சந்து பக்கம் நிக்குதம்மா

சனஞ்சாதி நெறைஞ்சிருக்கு 

சத்தம் போட்டு திட்டுவியா!   (வாடையிலும்)


கணக்குப் பாடம் தெரியாம

கையில் அடிச்ச வாத்தியாரை 

கணக்கு வழக்கு இல்லாம 

கரிச்சிக் கொட்டி திரிஞ்சவ தான்- இப்போ 

மாரடிச்சு மாரடிச்சு 

மரத்துப் போன கைகளுக்கு 

மருதாணி வெச்ச கையால் 

மருந்து வைக்க வருவீயா?  (வாடையிலும்)


வாயைக்கட்டி வயித்தைகட்டி

சுருக்குப்பையில் சேர்த்து வெச்சு

வேணுமின்னு கேக்கும் முன்னே

வாய்க்குருசி கொடுத்தவ தான் -இப்போ

வாயைக்கட்டி காலைக்கட்டி 

வாழைமட்டை பத்தி வெச்சு

வாசம் விட்ட தேகத்துக்கு 

வாய்க்கரிசி போடணுமா? 

          (வாடையிலும்)


சொத்தைவிட்டு சொகத்தைவிட்டு 

சொந்த பந்தம் ஏசவிட்டு 

செத்துவிட்ட அப்பன்பெருமை

சொல்லிச் சொல்லி அழுதவதான்- இப்போ

ஒதுக்கிவெச்ச சொந்தமெல்லாம்

ஒசத்திவெச்சு பேசுதம்மா 

நேசம் வெச்ச‌ தாயுனக்கு

நெருப்பு வெக்க ஆனதம்மா! (வாடையிலும்)


-வரத.வசந்தராஜன்

  நன்னிலம்


Sunday, August 30, 2020

மநுவைத் துளைக்கணும்

 ஏய்ச்சு பொழைச்சவன் பாதி 

ஏமாந்து போனவன் மீதி-இதில் 

என்ன மசிருக்கு சாதி 

இன்னும் வாழணுமா மனுநீதி? 


கஞ்சிக்கு வழியில்லை  

கால்முழம் துணியில்லை

அஞ்சுக்கும் பத்துக்கும் 

அல்லாடும் நெலைமையடா...


ஆனாலும் குதிக்கிற 

அரிவாளைத் தூக்குற‌

ஆண்டாண்டு காலமாய் 

மாறாத கொடுமையடா...        (ஏய்ச்சு) 


அங்காடி அரிசியில் 

அன்னாடம் பொழைக்கிற

அரைக்காணி நெலத்துல

ஒன்னாக உழைக்கிற 


ஆனாலும் குதிக்குற

அரிவாளைத் தூக்குற

என்சாதி ஒசத்தின்னு 

எகத்தாளம் பேசுற                  (ஏய்ச்சு) 


ஆள்கிற பரம்பரை

அரசனின் தலைமுறை 

எனச்சொல்லி திரிகிற‌

ஏமாளி கூட்டமடா...


ஆள்பவன் சதிகளில்

அவன்கேட்ட வரிகளில் 

மாண்டவர் எத்தனையோ? -அட

ஆண்டதில் சாதனையோ?     (ஏய்ச்சு)


அரசனின் சாதியில் 

அத்தனைப் பேருக்கும் 

அரியணை கிடையாதடா -உனக்கு

அதுகூடப் புரியாதடா!              


அந்தப் புரங்களில்

அடைபட்ட பெண்களில்

எத்தனை சாதிகளோ- வாரிசு

எந்தெந்த சாதியிலோ?            (ஏய்ச்சு)


அரிசியை விளைத்ததில்

ஆடையைக் கொடுத்ததில்

ஆயிரம் சாதியடா- நீயும்  

அறியாத சேதியடா!


தீட்டென ஒதுக்கிட்டால் 

தீண்டாமை பார்த்திட்டால் 

அம்மணக் குன்டிகளாய் -பசியில்

அலைஞ்சு சாகணுன்டா!     (ஏய்ச்சு)


சாதிய கத்திக்கு

சிந்திய ரத்தத்தின் 

சரித்திரம் மாறட்டுன்டா- நமது 

சந்ததி வாழட்டுன்டா!


அணுவையும் துளைக்கிற

அறிவியல் யுகம் இது 

மநுவையும் துளைக்கணுன்டா- அட

மனிதத்தை வளர்க்கணுன்டா!


-வரத.வசந்தராஜன்

நன்னிலம்.


Monday, July 6, 2020

அண்ணல் அம்பேத்கர்

அண்ணலிடம் ஊற்றெடுக்கும்
அறிவார்ந்த தத்துவங்கள்
கண்ணொளியை இழந்தவரும்
கண்டுணரும் மகத்துவங்கள்
பார்முழுதும் அலைந்தாலும் கிடைக்காது வேறெங்கும்?
பாரதத்தாய் கிரீடத்தில் மின்னுகிற ஒருதங்கம்!

தாழ்த்தப்பட்ட மக்கள் கையில் ஏந்துகிற ஒளிவிளக்கு
வீழ்த்தப்பட்ட ஓரினமே வணங்குகிற தனிக்கிழக்கு!

பார் புகழும் சட்ட மேதை!
பாரிஸ்டர் பட்ட மேதை!
பாமர மக்களின் பிரதி நிதியென
வட்டமேஜை மனதை தொட்ட மேதை!

பஞ்சப் பரம்பரை நெஞ்சத்தில் நீ
யாரும் தூண்டாமல் ஒளிரும் 'மகர'ஜோதி!
பிஞ்சில் நொந்த அனுபவம் தந்தது
பாழும் தீண்டாமை சாக்காடு தகர நீதி!

மனிதருக்குள் சிலபேரை மட்டமென எண்ணியோரை
மநுதர்ம தந்திரத்தை வேதமென பண்ணியோரை
அம்பலப்படுத்த அண்ணல் வந்தார்!

பலநூறு ஆண்டுகளாய் சாதிசொல்லி தாழ்த்தியதை
பல்வேறு படிகளாய் தீண்டாமை வீழ்த்தியதை
அப்புறப்படுத்த சட்டம் தந்தார்!

ஆராய்ந்த நூல்கள் ஆயிரம் இருந்தாலும்
அணியாத நூல்தான் அவரறிவை அளந்தது!
ஞானியாய் பின்னாளில் நாடறிய திகழ்ந்தாலும்
கோணியில் அமரவைத்த கொடுமையும் நடந்தது!

ஏதுமற்ற மக்களுக்கேன் நெருக்கடிகள்?
எத்தனைநாள் பொறுப்பதிந்த நுகத்தடிகள்?- என
எழுப்பிய கேள்வியெல்லாம் சவுக்கடிகள்
என்னபதில் சொல்லும்சாதி கைத்தடிகள்?

பிராமண சத்ரிய வைசியரும்
பஞ்சமரோடு சூத்திரரும்
புழங்கிட வேண்டும் பொதுவீதி- என
புலப்பட உரைத்தார் சமநீதி!

உயர்வெனல் தாழ்த்துதல் அவமதிப்பு
ஒதுக்கிப் பிரிக்கிற அருவருப்பு!
ஒவ்வொரு மனிதனும் ஒரேமதிப்பு
பெறும்வரை சுதந்திரம் புறக்கணிப்பு!

பித்தம் பிடித்தவர் நடத்திடும் வர்ணம்
தத்தம் சாதியை உயர்த்திடும் எண்ணம்‌
முற்றும் தீரவும் நெறியினைக் கண்டார்
புத்தம் சேரவும் வழியினைச் சொன்னார்!

மேல்நாட்டு மார்க்சுக்குப் பிந்தையவர்
தென்னாட்டு பெரியாரின் சிந்தையவர்
நம்நாட்டு அரசமைப்பின் தந்தையவர் - சாதி
கைநாட்டு  வெறியர்களின் விந்தையவர்!

அம்பேத்கர் பேருரைத்தால் பாமரருக்கு சிலிர்த்திடும் இப்போதும்!
அண்ணலெனும் பேரொலித்தால்
பாதகருக்கு வியர்த்திடும் எப்போதும்!
    -வரத.வசந்தராஜன்


சிவனுக்கு ரயில் இருக்கை

சிக்கு‌புக்கு ரயிலு ஒன்னு சீறி வருதுடோய்! -தம்பி
எக்கச்சக்க சாமி அதிலே ஏறி வருதுடோய்! 

கடவுளுங்க போகமட்டும் 
கச்சிதமா இருக்கை வெச்சி 
பயணத்துல களைப்புவந்தா 
பக்குவமா படுக்க வெச்சி       ‌(சிக்குபுக்கு)

சிவனோட குடும்பத்துக்கு 
பெட்டியொன்னு ஒதுக்கியாச்சு
டிடிஆரு பாத்துடாம 
'மூஞ்சுறை'யும் பதுக்கியாச்சு (சிக்குபுக்கு)

ஆதாரு காட்டாமலே 
அவதாரம் பத்துபேரு 
கூட்டிவந்த பெருமாளு 
கூட்டுக்குடும்ப கெத்துபாரு       (சிக்குபுக்கு)

பெண்களுக்கு தனியாக 
பெட்டியொன்னு இருக்குதுங்க
கணக்கில்லாத பெண்தெய்வம் 
படிவரைக்கும் நெறுக்குதுங்க       (சிக்குபுக்கு)

சூலம் வேலு வில் அம்பு 
வகைவகையா ஆயுதமாம்
தேடிப்பிடிச்சு லக்கேஜில்
ஏற்றிவர தாமதமாம்                         (சிக்குபுக்கு)

அப்பர்பெர்த்தில் அனுமாரு
மிடில்பெர்த்தில் பைரவரு 
சேவல் மயில் பாம்புவரை 
லோயர்பெர்த்தில் வெகுஜோரு     (சிக்குபுக்கு)

நவக்கிரக சாமிகளும் 
முன்பதிவு செஞ்சிருக்கு
நேருக்குநேர் பாத்துக்காம
சீட்டுகளை மாத்திருக்கு                  (சிக்குபுக்கு)
ர்

மருந்துகேட்டு மிரட்டும் அமெரிக்கா

காரம் தின்ன கோழியொன்னு கொக்கரிக்குது...
காட்டுநரி பயந்து போயி நமஸ்கரிக்குது...
அகலமாக நெஞ்சை இன்னும் விஸ்தரிக்குது-அதன் 
வீரமெல்லாம் கோழிக் குஞ்சை எச்சரிக்குது!

பாயும்புலி வேஷமெல்லாம் வெறும் பேச்சுதான்
பயம்மறைக்க பூசுகிற‌ முகப்பூச்சுதான்!
எலும்பும் தோலுமாயிருந்தா ஆளை மிரட்டுது
எக்குத்தப்பா ஆகுமுன்னா வாலை சுருட்டுது! 

கெழட்டுசிங்கம் கொழுப்பெடுத்து வாயைப் பொளக்குது
குருட்டுப்பூனை கருவாட்டை படி யளக்குது!
வறட்டுவீரம் பேசுகிற வானர பாணி- சும்மா
இருட்டுநேரம் உருட்டுகிற பழம் பெருச்சாளி!

வெளிப்படையா மிரட்டுதுங்க வெள்ளை மாளிகை
வேடிக்கைதான் பாக்குதுங்க ராமன் பாதுகை!
ஆர்எஸ்எஸ் இயக்குதா அமெரிக்கா இயக்குதா...?
அம்பத்தாறு இஞ்சுக்குள்ள தேசப்பற்று இருக்குதா?

கண்டனங்கள் இந்நேரம் முழங்கி இருக்கணும்
கண்டம்தாண்டி இந்தியாவின் குரல் ஒலிக்கணும்!
ஐநாவில் அமெரிக்கா கையக் கட்டணும்
அப்புறந்தான் விளக்கேத்தி கையத் கட்டணும்! 
      -வரத.வசந்தராஜன்

காவல்துறை அடாவடி

மன அழுத்தமா நெஞ்சழுத்தமா?
மனசு இருந்தா சொல்லுங்க...
கதறலைக் கேட்டும் இரக்கமில்லியா
காக்கிகள் மனசு கல்லுங்க...

அடா புடான்னு கூப்பிடுவாரு
தடா பொடான்னு மிரட்டிடுவாரு
ஆண்டவன் ரோட்டுல வந்தாலும்
அக்யூஸ்டை போல தடுத்திடுவாரு...

கண்ணுல மாட்டுனா சேதாரம்
காட்டச் சொல்லுவார் ஆதாரம்
உரிமையைக் கேட்டா வீண்வாதம்
அதுக்கும் போடுவார் அபராதம்!

கெட்ட வார்த்தைகள் அத்தனையும்
காவல்துறைக்கு அத்துப்படி
இப்படிப் பேச வழியிருக்கா
இபிகோவின் சட்டப்படி..?

தள்ளுவண்டி  அண்ணாச்சியும்
மல்லுக்கட்டணும்
தரைக்கடை ஆளுங்களும் மாமுல்வெட்டணும்
லாரி வேனு ஓட்டுநரும்
லஞ்சப்பணம் அள்ளி நீட்டணும்!

கள்ளநோட்டு கும்பலுக்கும்
கனிமவள திருடனுக்கும்
சலாம் போடுவார்- குனிஞ்சு
சலாம் போடுவார்!

பொதுசேவை செய்பவரை
போராட்டக் காரர்களை
போட்டுத் தள்ளுவார்- துணிஞ்சு
போட்டுத் தள்ளுவார்!

டாஸ்மாக் வாசலிலே
காவல் இருப்பார்
தடைகேட்டு போராடினால்
காலில் மிதிப்பார்!

உயர் அதிகாரிகளின்
ஏவல் முடிப்பார்
காய்கறிகள் வாங்கித்தந்து
சேவல் பிடிப்பார்!

ஏழைகள் என்றால் இளக்காரம்
எவன் கொடுத்தான் அதிகாரம்?
மருந்துக்கும் இல்லை மனசாட்சி
மாற்றிச் சொல்லுவார் பொய் சாட்சி!

திருப்பி அடித்தால் அவமானம்
தெரிந்து நடந்தால் தன்மானம்
கையில் எடுப்போம் லத்தியை
கற்று கொடுப்போம் புத்தியை!


காவி ராஜ்ஜியம்


நேத்துநடு ராத்திரியில் கெட்ட கனவுங்க
பாத்தகதை வேறெங்கயோ கேட்ட நினைவுங்க!

அமெரிக்காவின் கோவணத்தை வெளுத்து கொடுக்குறான் -அதன்
அழுக்குநிறம் காவியின்னு பெருமை பீத்துறான்!
தமிழ்நாடு வந்தப்பொருளை தடுத்து நிறுத்துறான்
தலையாட்டி சலாம்போட்டு தாவிக் குதிக்கிறான்!    
                                                             ‌ ‌ (நேத்துநடு)
வழிப்பறி திருடனுக்கு வழியை சொல்லுறான் வல்லூறூ பசியடங்க உயிரை கொல்லுறான்
காலமெல்லாம் அடிமையாக இருந்து பழகுறான்
காலணியில் தேன்தடவி விழுந்து தொழுகுறான்!
                                                             ‌ ‌ (நேத்துநடு)
நாடாளும் மன்றத்துக்கு கோடி ஒதுக்குறான்
நாட்டைக்கெடுத்த பேர்களுக்கு சிலையை வைக்குறான்
நாலஞ்சு லட்சத்துல கோட்டு தைக்குறான்
நிவாரணம் கேட்டாலே நீட்டி முழக்குறான்
                                                             ‌ ‌ (நேத்துநடு
பெத்தபுள்ள சோத்துத்தட்டை எட்டி உதைக்கிறான்
மத்தவங்க ஊட்டவந்தா முட்டி விரட்டுறான்
மனமிறங்கி உதவினாலும்  தடையை போடுறான் -அடச்சே
மனசாட்சி இல்லாம பெருமை‌ தேடுறான்!                                                         
                                                             ‌ (நேத்துநடு)
அடிமையாக பழகுனவன் முதுகு நிமிருமா?
அறிவுரைகள் கேட்டுநாய் வாலு நிமிருமா?
தேசப்பற்று பேசுனவன் வாய் மலருமா? -இல்ல
தேர்தலுக்கு மட்டும்தான் நினைவு திரும்புமா?
                                          -வரத.வசந்தராஜன்
           

கொரானா நிவாரணம்

அண்ணாத்தே சொன்னது எல்லாம் சரி
அவசியங் கேளுங்க வரிக்கு வரி
அன்னாடங் காய்ச்சிக்கு என்ன வழி? 
அதைச்சொல்லாம எதுக்கு இந்தக் கிழி!

பொல்லாத வைரஸை இல்லாம ஒழிக்க
செல்லாதே வெளியே பரவாம தடுக்க
லக்ஷ்மண ரேகையை போட்டாரு குறுக்கே
ராமனின் சேனைகள் நரம்பெல்லாம் புடைக்க
                                            (அண்ணாத்தே)
மூவேழு நாளுக்கு முடங்குது நாடு
தீவாக மாறணும் தனித்தனி வீடு
வாவென அழைக்குது வைரஸின் காடு
வருவழி அடைக்கணும் வீட்டுக்குள் ஓடு
                                              (அண்ணாத்தே)
கூட்டத்தில் பரவும் வாய்ப்புகள் பெற்று
சங்கிலித் தொடராக பெருகுது தொற்று
வளர்ந்த நாடுகள் அனுபவம் கற்று 
தனிமையில் இருப்பதே நம்தேசப் பற்று 
                                            (அண்ணாத்தே)
பின்னாலே போகுமாம் பொருளா தாரம் 
முன்னாலே ஒசந்ததா உண்டா ஆதாரம்
ஓடாத குதிரைக்கு சறுக்குமாம் ஓரம் 
ஆடாத காலுக்கு அமைஞ்சது நேரம்
                                           (அண்ணாத்தே)  
வேலைக்குப் போனாதான் வேளைக்குச் சோறு
வேதனை சொல்லாம வாழ்கின்ற பேரு
வீட்டுக்குள் அடைந்தால் என்னாகும் பாரு
வயிற்றுக்குச் சோறிட வழியுண்டா கூறு.   
                                                  (அண்ணாத்தே)
தாய்மார்பில் பாலின்றி இளையது கத்த
தலைச்சனும் கேக்குது ஏன் என்னை பெத்த?
வாழ்வுக்கு வழிசொல்லா வார்த்தைகள் சொத்தை
வெறும்வாயால் பந்தலைப் போடுற வித்தை
                                                  (அண்ணாத்தே)

கார்ப்பரேட் மானிய கரன்சியை உருவி 
காய்ப்புகள் காய்த்த கரங்களைத் தழுவி
உணவுக்கும் மருந்துக்கும் சிறுதொகை உதவி
கடனுக்கும் குழுவுக்கும் விடுப்பினை அறிவி
                                                     (அண்ணாத்தே)

வரத.வசந்தராஜன்

Sunday, July 5, 2020

தனியார் மயம்

முச்சந்தியில் கடைபரப்பி கூவி- நாட்டை 
மூட்டைகட்டி விக்குதுங்க காவி!
திருடன்கையில் தந்தோமே சாவி -இனி 
ஆவதென்ன அழுதுபுலம்பி கேவி!

தனியாரு மடியில தற்சார்பை தேடுது
முதலாளி நிழலுல முட்டிரெண்டும் தேயுது
போகாத ஊருக்கு வழிதேடி நிக்குது
ஆகாத கதைசொல்லி பொதுத்துறையை விக்குது...

அரசுத்துறையில் லஞ்சம் ஊழல் தொல்லையாம்
அதுவெல்லாம் தனியாரில் இல்லையாம்
தனியாரில் தில்லுமுல்லு நடக்குதுங்க- இந்த 
தற்குறிகள் தெரியாம பேசுதுங்க! 

பரதேசிக் கோலமா நாடு கிடக்குது- அரசு
பட்டுசட்டைக் காரனுக்கு பட்டன் தைக்குது
பிச்சைக்காரன் தட்டுலயும் பங்கு கேக்குது
பணக்கார கூட்டத்துக்கு பந்தி வைக்குது! 

மக்களாட்சி என்பதெல்லாம் பேருக்கு தாங்க- இங்கு
மகுடமெல்லாம் ஏய்ச்சுபொழைக்கும் ஆளுக்கு தாங்க?
வாயைப்பொத்தி இருப்பதால வாழ்க்கை மாறுமா? -நாம
வர்க்கமாக சேராம வசந்தம் வீசுமா?

கண்ணெதிரே கொடுமை கண்டு சினப்படு தோழா
கயவர்களை தோலுரிக்க புறப்படு தோழா!
          -வரத.வசந்தராஜன்

Saturday, July 4, 2020

மலக்குழி மரணம்

ஏழைங்க செத்தா கணக்கில்லையா? -அட 
எவனுக்கும் காதுல கேக்கலயா? 
பாவிங்க வாழும் உலகத்துல -பஞ்ச 
பரம்பரை வாழ வழியில்லையா? 

மலக்குழி எங்களின் சவக்குழியாய்
மாறுது எத்தனை தலைமுறையாய்? 
சாதியம் என்கிற புதைகுழியால் 
நாறுது நாடே சாக்கடையாய்!

கடலின் அடியில் கிடப்பதையும்
கண்டு பிடிக்க கருவிகளா?
மண்ணில் புதைந்த வளங்களையும் 
தோண்டி எடுக்க வருவீகளா?

சந்திர செவ்வாய் கோளுக்கும் 
எந்திரம் அனுப்புதல் சாதனையா?
சாக்கடை அடைப்பை கருவிகளால்
போக்கிட அறிவியல் போதலையா?

திங்குற கையால் அள்ளுகிறோம்
தலைவிதி எண்ணி வெம்புகிறோம்
சாதியம் பேசும் மனிதர்களை 
சாக்கடைப் புழுவாய் எண்ணுகிறோம்!

கழிப்பறை எங்களின் கருவறையாய்
கடவுளை காண்கிறோம் மலவடிவாய்
தூணிலும் துரும்பிலும் இருப்பானா?
தூய்மைப் பணியை வெறுப்பானா?
            
                                         -வரத.வசந்தராஜன்

Thursday, July 2, 2020

கிணற்றுத் தவளைகள்

பார்வைக்கு அப்பாலும் 
பிரபஞ்சம் உண்டென்று 
போர்வைக்குள் கிடப்போர்க்கு யார் சொல்லுவார்? 
போர்வைக்கோல் மேலேறி பிறைநிலா 
தொடுமென்று 
வேர்வைக்கும் எண்ணத்தை யார் வெல்லுவார்?  

முதுகுக்கு பின்னாலே நடப்பதை அறியாமல் 
கழுகுக்கு இரையாகும் கோழிக்குஞ்சே!
வாழ்வுக்கு வழிகாட்ட வாவென அழைத்தாலும் 
வீம்புக்கு வெளிச்சென்றால் யார் பேணுவார்? 

நல்லதை பொறுக்காமல் நலம்நாடி கிடக்காமல்
அல்லதை அழகென்று அதைத்தேடி அடைவோரும்
பொல்லதை உணராமல் பொய்யாலே மயக்கிட
வல்லதை சேர்வோரும் பின் நாணுவார்?

பட்டத்தின் மீதேறி  பறக்கிற ஆசையில் 
விட்டத்தில் தானேறி தேடுவார் நூலேணி- ஒரு
கட்டத்தில் பித்தேறி கண்டதை பேசிச்சிறு 
வட்டத்தில் பிடுங்குவார் தேவையில் லாஆணி!

விண்ணறிவை அறிந்தவனை விஞ்ஞானி எனக்கொள்வோம்
மண்ணறிவை உணர்ந்தவனை விவசாயி எனச்சொல்வோம்
தன்னறிவை அளந்தவனை தற்பெருமை எனத்தள்ளி 
நுண்ணறிவை உடையவனை நுட்பத்தால் நாமறிவோம்! 

-வரத.வசந்தராஜன்

Wednesday, July 1, 2020

வயல்வெளி காதல்

பெண்
ஆத்துமீனை பாக்கும்போது அடிமனசில் நூறுஆசை
சேத்துமடை கெளுத்தியாட்டம் குத்துகிற மாமன்மீசை
சோத்துப்பானை கரியைப்போல சொக்கும்நெறம் அமாவாசை
நாத்துவீச வாரீகளா நடவுமறந்து நானும்பேச?

ஆண்: 

வரப்புமேல நீநடந்தா வழுக்குதடி என் மனசு
செருப்புமறந்த பாதத்துல சிணுங்குதடி பூங்கொலுசு
கருத்தநெறம் மாறட்டுமே செவத்தபுள்ள நீயுரசு
கழுத்துமணி நுனியிலதான் கட்டழகே உன்மவுசு!

பெண்:
வெவரமான ஆளுநானு விவகாரம் பேசாதீக
விலைபேசி வம்பைவாங்கி வில்லங்கம் சேக்காதீக
தாலிகட்டும் முன்னாடியே கேலிபேச கூடாதுங்க
வேலிபோட்டு விரட்டினாலும் வெள்ளாடு ஓடாதுங்க! 

ஆண்:
அத்தைமக முறையிருக்கு ஆனாலும் பயமிருக்கு
ஆடிப்பட்டம் வெளஞ்சிருக்கு  தைபொறந்தா வழியிருக்கு
மத்தாட்டம் கடையத்தானா மவராசி விழியிருக்கு 
பித்தாட்டம் அலையுறேன்டி போகலயே மனக்கிறுக்கு!

பெண்:
பருத்தியெடுக்கும் வயலுக்குள்ள வெடிக்குதய்யா புரளியொன்னு
பனைமட்டை கருக்கைப்போல அறுக்குதய்யா ஊருகண்ணு
நெனவுதெரிஞ்ச நாள்முதலா உனக்காக வாழும்பொண்ணு
கனவுகண்டு காத்துகெடக்கேன் கைபிடிக்க வரணுமின்னு!

ஆண்:
விண்ணைவிட்டு வெள்ளிநிலா மறைஞ்சுபோகும் ஆனாலும்
தென்னைபட்டு கூடுவிட்டு கிளிபறந்து போனாலும் 
உன்னைவிட்டு நான்பிரிஞ்சு உசிருவளர்க்க மாட்டேன்டி
தண்ணிவிட்டு மீனுவாழ்ந்தா தங்கமேநீ காட்டேன்டி! 

இருவரும்: 
விதைநெல்லு சாட்சிவெச்சு வெத்தலையும் பாக்குவெச்சு 
ஊரெல்லாம் கூட்டிவெச்சு ஒருநாளு பாத்துவெச்சு
நீயும்நானும் சேரப்போறோம் நெனச்சபடி வாழப்போறோம்
பாயும்தல காணிபோல பிரியாம இருக்கப்போறோம்!
          வரத.வசந்தராஜன்

Friday, June 19, 2020

19.06.2016 தீக்கதிரில் என் படைப்பு


                    ஊர் வாய்

வாயாடிச் செருக்கி அவ
வக்கீலுக்குப் படிக்கிறாளாம்!
வடிச்சு  கொட்டப் போற கழுதை 
படிச்சு என்ன கிழிக்கப் போறா?

கோயிலுக்குப் போக மாட்டா!
கோலங்கூட  போட மாட்டா! 
தீட்டு பட்ட நேரத்திலும் 
தூரம் தள்ளி இருக்கமாட்டா!

பொண்ணா லட்சணமா
பொறுமையா பேச மாட்டா! 
அச்சம் மடம் நாணத்தோட 
அடக்கமா சிரிக்க மாட்டா!  

மூத்தவக பெரியவக 
முறையுள்ள மாமனுங்க 
கிண்டல் கேலி பேசிப்புட்டா
ரெண்டில் ஒன்னு பாத்துடுவா!

சீமைத்துணி உடுத்துறா
சீர்திருத்தம் பேசுறா!
நேரங்கெட்ட நேரத்துல 
ஊருவந்து சேருறா!

இப்படியே இருந்தாக்கா
இவளை எவன்  கட்டிக்குவான்?
எனக்கென்ன தோணுதுன்னா
எவனையாச்சும் வெச்சிருப்பா!

அப்பன்காரன் செவப்பு சட்டை
அவங்கொடுத்த தைரியந்தான்
போராட்டம் கூட்டத்துக்கும் 
பொண்ணையும் கூட்டிப் போறான்!

காலங்கெட்டு கெடக்குதுங்க
கலி முத்திப் போச்சுதுங்க
ஆயிரந்தான் இருந்தாலும்
ஆணும் பொண்ணும் சரிசமமா?

என்னென்னவோ சேதி சொன்னா
எல்லாமும் சரிதாங்க!
பொட்டச்சி பேச்சை கேட்டு  
பொறுத்துக்கிட்டா  ஆம்பளையா? 

இருபத்தொன்னாம் நூற்றாண்டிலும் 
இப்படித்தான் ஊர் பேச்சு!- இந்த
ஆணாதிக்கம் மாத்தலையே 
அம்பது வருஷ ஆட்சி!

                                        வரத.வசந்தராஜன்
                                       நன்னிலம்.

Thursday, June 11, 2020

கொரானா பாடல்

எந்தச்சாதி எந்தமதம் கேக்கவுமில்ல
ஏழைபணக் காரனென்று பாக்கவுமில்லை
எல்லோரையும் சரிசமமா தாக்குதுங்க கொரானா
வெள்ளிக்காசை சல்லிக்காசா மாத்துதுங்க கொரானா!

தாயிபுள்ளை தூரமாகிப் போச்சு பாருங்க
நோயுங்கூட உலகமயம் ஆச்சு பாருங்க
வீட்டுக்குள்ள அடங்கணுமாம் அரசு சொல்லுது
வீதியில முடங்கும் கூட்டம் விதியை எண்ணுது!

ஊரடங்கு போட்டதுமே வயிறு அடங்குமா
பசியடங்க மாத்திரைகள் போட முடியுமா?
அன்னாடங் காய்ச்சிகளின் அழுகை தீருமா
அரசாங்க காதுகளில் கதறல் விழுகுமா?

நோட்டுதந்தா ஓட்டு போடும் மந்தைகளாக
போட்டமுதல் மீட்டு தரும் சந்தைகளாக
விழிப்புணர்வு இல்லாம சனங்க வாழுது
விலகமறந்து வீதியிலே  கூட்டம் கூடுது!

விஞ்ஞான சாதனைகள் மண்ணைக் கவ்வுது
விண்ணாளும் ஏவுகணை பல்லைக் காட்டுது
வல்லரசு நாடுகளும் வாயைப் பிளக்குது
வாங்கிவெச்ச ஆயுதத்தை எடைக்குப் போடுது!

கடவுளெல்லாம் ஓடிப்போயி கதவைச் சாத்துது
கதையளந்த கூட்டம்பாரு இழுத்து போத்துது
ஒட்டுமொத்த பூமியுமே பயந்து நடுங்குது
சோஷலிச அரசுதாங்க கையில் தாங்குது!

மருந்துவர்கள் எண்ணிக்கையை அதிகம் ஆக்குது
மருந்துகளை அரசுடைமை ஆக்கி வைக்குது
கடைக்கோடி மனுசனுக்கும் கல்வி மருத்துவம்
இலவசமா கிடைக்கும்படி சட்டம் வகுக்குது

மனுசனுக்கு அனுபவந்தான் பாடம் நடத்துது
மகத்தான தத்துவத்தை சொல்லி கொடுக்குது
வரலாறு முழுவதுமே வர்க்கப் போரடா?- இந்த
வல்லூறு கூட்டமினி சுக்கு நூறடா!
                          -வரத.வசந்தராஜன்

Thursday, May 28, 2020

இலக்கை நோக்கி

சிங்கத்தின் வாயில் நம் தலையிருக்கு 
சிலந்திக ளோடென்ன வம்பு வழக்கு?
மலைகளை பிளப்பது நம் இலக்கு 
மணல் துகளோடு பேச்செதுக்கு?

புலிகளை வீழ்த்த புறப்பட்ட பின்பு
புள்ளிமான் எதிர்ப்படும் சீண்டாதே!
அம்புகள் வழியில் யோசனை செய்தால்
அதுபோய் குறியினைத் தீண்டாதே!

சூரியக் கிரணங்கள் சுடுகிறதென்று 
கடல்நீர் அழுது கிடப்பதில்லை...
கூரிய ஏர்மூனை கீறுவதாக 
வயல்வெளி உழுதிட மறுப்பதில்லை!

தவளைகள் தமக்குள் முட்டிக்கொண்டால்
எலிகள் நேரத்தைப் பார்த்திருக்கும்!
எலிகளுக் கிடையிலும் சண்டையென்றால் 
பாம்புகள் பகையுடன் காத்திருக்கும்!

பொதுவில் நமக்கொரு எதிரியுண்டு 
போகிற‌ வழியினில் உதிரியுண்டு 
எதிரி யாரெனத் தெளிந்திடுவோம்
உதிரிகள் கூச்சலை ஒதுக்கிடுவோம்!
  

எனது முதல் கவிதை தொகுப்பு





புலம் பெயர்ந்த மனசு

புலம் பெயர்ந்த மனசு

வந்தபோது தெரியாது 
சொந்த ஊரை 
இவ்வளவு தூரத்தில் 
விட்டிருக்கிறோமென...

இட்டிலிக்குள் 
கறி இருப்பதைவிட 
ஆச்சரியம் தான்
ஒரே பெட்டிக்குள் 
நாங்கள் 
ஒட்டிக்கொண்டு வந்த கதை...

பான்பராக் வாயைப்
பரிகசித்த நீங்கள்
பசித்த வயிற்றைப் 
பார்த்திருக்க 
மாட்டீர்கள்...

அடுத்த வேளைக்கு
80லட்சத்தில் 
ஆடையிருந்தால் 
அழுக்கை சுமக்க 
ஆசையா எங்களுக்கு?  

இந்தி வாலாக்கள் 
என ஒதுக்குவீர்கள் 
இந்தப் பிரிவினை 
இன்னுமா நீளுகிறது 
மந்தி வாலாக...

அற்பக்கூலிக்கு 
உழைக்க வந்தவர்களா
உங்கள் 
அரிய வாய்ப்பை 
அபகரித்தது? 

கட்டிட இடிபாட்டில்
பட்ட காயத்தில் 
புரையோடி கிடக்கிறது
உழைப்புச் சுரண்டல்! 

சஞ்சீவி மலையோடு 
பெயர்த்துச்செல்லவா
முடியும்?
என் உடல்தேவைக்கு 
உயிர் சுமக்கும் 
கர்ப்பிணி மனைவியை...

கால்வலிக்குதென 
கைதூக்கச் சொல்லும் 
குழந்தையை 
எந்தக் கரத்தில் 
தூக்குவது 
மூட்டை முடிச்சுகளோடு 
சேர்த்து...

சூட்கேஸ் தூக்கியே 
பழகிய கைகள் 
எங்கள் 
சுமைகளைத் தூக்க 
எப்படி நீளும்? 

மைல் கணக்கில் 
தூரம் பார்த்த எமக்கு 
நாள் கணக்கில் 
நடக்க வேண்டியுள்ளது 
பிழைத்த இடத்திலிருந்து
பிறந்த இடத்திற்கு...

நடந்து நடந்து 
கொப்புளமாகிறது 
பாதங்களிரண்டும்...
பாதணிகளை
அரியாசனத்தில் வைத்த
அறியா சனம் நாங்கள்! 

எப்படியேனும் 
புலம் பெயரட்டும் 
ஆட்சிகள்!

Wednesday, May 27, 2020

வருக வருக

உள்ளுக்குள் உருகிடும் தமிழ்ப்பனியை 
ஊற்றி உறையிடும் தமிழ்ப்பணியை
எவ்விதம் செய்வது தெரியவில்லை
எவ்விடம் சேர்ப்பது புரியவில்லை...

வார்த்தைகள் தினந்தினம் பூக்கிறது 
வாய்ப்புகள் எத்தினம் கேட்கிறது!
ஆயிரம் வாசல் இருக்கிறது -அட தச
திறவுகோல் எங்கோ கிடக்கிறது!

தாய்வழி வந்த மரபல்லவா-இது 
தாய்மொழி தந்த வரமல்லவா? 
வார்த்தைகள் கோர்ப்பது சுகமல்லவா
வாசகன் ரசிப்பது விருதல்லவா? 

பூட்டி வைப்பதில் பலனுமில்லை 
பூட்டுதல் தமிழுக்கு பலனுமில்லை
வருவதை வாரி இறைக்கின்றேன்
தருவது எதுவோ ஏற்கின்றேன்!

இணைய வழியை தேடி நின்றேன்
இணையவழியை தேடி வந்தேன்.

இனி சந்திப்போம் தமிழோடு...