கண்முடி... வாய்மூடி
போனதெங்கே மோடி?
காலம் வந்து கிழிக்குதடா
காவிகள் முகமூடி!
புனித கங்கையே
மனித பிணங்களாய்
போனது யாரின் புண்ணியம்?
நாயின் வாயிலே
தாயின் தலைக்கறி
பார்த்து பதறுதே பிள்ளையும்!
இதுதானா இதுதானா!
ராம ராஜ்ஜியம்?
உலகம் காறி துப்புதடா
உங்க லட்சணம்?
பொட்டலங் கட்டிய
சவங்களுக்கிடையே
போகுது உங்களின் பொய்மூட்டை!
நாத்தம் சகிக்கல
நாயும் சீண்டல
நிறுத்துங்கடா உங்க வாய் பாட்டை!
இதுதானா இதுதானா!
ராம ராஜ்ஜியம்?
உலகம் காறி துப்புதடா
உங்க லட்சணம்?
தடுப்பு ஊசிக்கு
ஆய்வு நடக்கையில்
தட்டும் கரண்டியும் தூக்கினோம்
மாட்டு சாணியும்
மருந்து கோமியம்
மணியை வேகமா ஆட்டினோம்?
இதுதானா இதுதானா!
ராம ராஜ்ஜியம்?
உலகம் காறி துப்புதடா
உங்க லட்சணம்?
ஆக்ஸிஜனில்லே
ஆம்புலன்ஸ் இல்லே
செத்து மடியுது உசுருங்க...
மாடுங்க செத்தா
மல்லுக்கு வருவீங்க
மனுசன் செத்தா மசுருங்க!
இதுதானா இதுதானா!
ராம ராஜ்ஜியம்?
உலகம் காறி துப்புதடா
உங்க லட்சணம்?
கணக்குல வரல
கண்ணுல காட்டல
மர்மம் பிரதமர் நிதியில...
சேர்ந்த பணத்துல
மிதக்கும் பிணத்துக்கு
கருமம் பண்ணலாம் திதியில!
இதுதானா இதுதானா!
ராம ராஜ்ஜியம்?
உலகம் காறி துப்புதடா
உங்க லட்சணம்?
-வரத.வசந்தராஜன்
Saturday, May 15, 2021
Saturday, May 8, 2021
செவிலி
ஆட்டுக்கொம்பில்
கட்டப்பட்ட
பசுந்தழையென
கண்ணுக்கு முன்
ஆடுகிறது
சக மனிதர்களின் மரணம்!
அங்கொன்று
இங்கொன்று என்பதல்ல
எங்கெங்கும்
ஊடுருவுகிறது
உயிர்க்கொல்லி கிருமி!
மானுடம் சமைத்த
மாளிகையென்றோ
மகுடங்கள் அமைந்த
மந்திரியென்றோ
பேதமின்றி இழுக்கிறது
சவக்குழிக்குள் கொரானோ!
கூடுவிட்டு விழுந்த
குஞ்சுக்குருவிக்காகவே
பதைக்கிற மனம்
கண்முன்னே விரியும்
கொத்துக் கொத்தான
மரணங்களால்
குலைநடுங்குகிறது!
பூமி போதாமல்
செவ்வாயை வளைக்க
செயற்கைக்கோள்
ஏவிய மானிடம்
வாய்பிளந்து நிற்கிறது
வால் நட்சத்திரம்
விழுந்தாவது
கொரானா அழியுமாவென
..
வளரும் நாட்டின்
வரிசையில் நிற்கையில்
கால் பிடித்து இழுக்கிறது
படுக்கையின்றி கதறும்
பரிதாபக் குரல்கள்!
ஆக்ஸிஜன் தட்டுப்பாடென
தகவல் கிடைத்து
மூச்சுமுட்டுகிறது
கிருமி தாக்காமலே...
தடுப்பூசி போட்டேனும்
மரணத்தை
தள்ளிப்போட
நினைத்தவர்கள்
தடுப்பூசி
இல்லையென்றதும்
தள்ளாடிப் போகிறார்கள்...
படைப்புக்கும்
அழிவுக்கும் நடுவில்
பரிதவிக்கிற யாரும்
காக்கும் கடவுளை
கருதுவதாயில்லை...
தகரத் தடுப்புகளுக்கு
கஜானாவின்
முடிச்சவிழ்த்தவர்கள்
செவிலியர்களுக்கு
சுருக்கு போடுகிறார்கள்
பணிச்சுமையால்...
எந்திரங்களாகவே
பார்க்கப்படும்
எங்களுக்கு
ஊக்கத்தொகையுமில்லை...
எங்கள் வலியுணரும்
உணர்வுகளுமில்லை...
கடமையை செய்
பலனை எதிர்பாராதே
என்றவர்கள்
கடமையே செய்யாமல்
பலன் பெறுகிறவர்கள்!
மருத்துவமனை
வராந்தாக்கள்
நாங்கள் ஓடி ஓடியே
தேய்ந்து போயின...
புலம்பித் தீர்க்கவும்
ஓய்வில்லை...
புலம்பல் கேட்கவும்
ஆளில்லை!
பருவநிலை
வானிலை அறிவிப்பைக்
கேலிசெய்ய
ஒத்திகை பார்க்கிறது
பெய்யெனப் பெய்யா மழை!
காக்காய்க்கும் நரிக்கும்
கல்யாணம் கட்டி
நடக்காத கதையாக
பாட்டி சொன்ன
மழைக்கால வெயில்
இளம்பாம்புகள்
இணையும் காட்சியாய்
அவ்வப்போது காண
முடிகிறது.
மழை வராதென்ற
மரபின் நம்பிக்கையை
நமத்துப் போக
செய்கிறது
மொட்டை மாடி வடகம்!
மும்மாரி பெய்த
மழைக்கு
முளைப்பாரி கட்டி
அனுமதி கொடுத்தவர்கள்
மழைநீர் சேகரிப்புத்
திட்டத்துக்கு
மனு கொடுக்கிறார்கள்!
ஆடிப் பட்டம்
தேடி விதைக்க
ஆற்றில் எங்கே
தண்ணீர்?
ஆழ்துளை கிணற்றுக்கு
ஆகும் செலவில்
ஐந்து பெண்ணுக்கும்
திருமணம்
செய்யலாமென்ற தப்புக்கணக்கில்
தரிசாய் கிடக்கிறது
பெண்ணும் மண்ணும்...
வானம் பார்த்த
பூமியொன்று
தனியாக
இல்லை...
அலையடங்குமென
பாட்டி சொன்னாளே
அந்த நாட்களிலும்
கொந்தளிக்கிறது
கடல்.
வண்டல் மண்ணும்
பாறையாக பிளக்கிறது
மணலில் கூட
பாசி படர்கிறது
மேகங்களின் தகிப்பில்
ஆகாய விமானங்களில்
தெறிப்பு கூட வரலாம்!
யாருக்குத் தெரியும்
பனிமலைகள் நமக்கு
பாதாள குழியாகலாம்!
அதிகபட்சம்
பேரிடர்களுக்கு
பெயரிடுவதைத் தவிர
பருவநிலை மாற்றத்துக்கு
என்ன கிழிக்கும்
முதலாளியப் போட்டியில்
முண்டுகிற நாடுகள்!
மூன்றாம் உலக நாடுகளில்
குப்பை நிரப்பும்
முதல்நிலை
நாடுகளுக்கு
புரிவதேயில்லை
பூமிக்கெல்லாம்
வானம் ஒன்றுதான்...
கரையோரத்தில் தான்
சுனாமி வருமென
கைகட்டி இருந்தால்
காலுக்கடியில்
பூமி பிளக்கலாம்
எச்சரிக்கை!
இதழ்த்தாவணி
குடம் கணக்கில்
பெருகிய ஆசைகளை
யாருக்கும் தெரியாமல்
வேருக்குள் ஒளித்துவிட்டு
இதழ்த்தாவணியை
இழுத்து மூடுகிறது
ரோஜா!
பெருகிய ஆசைகளை
யாருக்கும் தெரியாமல்
வேருக்குள் ஒளித்துவிட்டு
இதழ்த்தாவணியை
இழுத்து மூடுகிறது
ரோஜா!
Subscribe to:
Posts (Atom)