Monday, August 25, 2025

பெண்ணைச் சமமாய் கொள்வோம்

ஆதித் தாயின் பாதம் 

ஆடித் திரிந்த காலம் 

மண்ணில் திரும்பிடுமா? 

இன்பம்

பெண்ணில் அரும்பிடுமா?

இன்பம்

பெண்ணில் அரும்பிடுமா?


ஆதித் தாயின் பாதம் 

ஆடித் திரிந்த காலம் 

மண்ணில் திரும்பிடுமா? 

இன்பம்

பெண்ணில் அரும்பிடுமா?

இன்பம்

பெண்ணில் அரும்பிடுமா?


கோல விழியின் ஓரம் 

பூணுகின்ற ஈரம் 

என்று மறைந்திடுமோ? 

ஆயுள் 

இன்னும் கரைந்திடுமோ?

ஆயுள் 

இன்னும் கரைந்திடுமோ?


கோல விழியின் ஓரம் 

பூணுகின்ற ஈரம் 

என்று மறைந்திடுமோ? 

ஆயுள் 

இன்னும் கரைந்திடுமோ?

ஆயுள் 

இன்னும் கரைந்திடுமோ?


அடர்ந்த வனத்திலே 

மனிதன் வாழ்ந்த தினத்திலே

வாழ்ந்த தினத்திலே 

தாயின் வழியிலே 

இனங்கள் தழைத்த போதிலே 

தழைத்த போதிலே


உடைமையென்ற ஒன்று அன்று இருந்ததில்லையே 

அடிமையென்று யாரும் அங்கு

உலவ வில்லையே! 

உடைமையென்ற ஒன்று அன்று இருந்ததில்லையே 

அடிமை என்று யாரும் அங்கு

உலவ வில்லையே! 


ஒன்று கலந்தே நாளும் 

உண்டு மகிழ்ந்த காலம்

மண்ணில் திரும்பிடுமா? 

இன்பம்

பெண்ணில் அரும்பிடுமா?     (ஆதி)


வேட்டை ஆடவும் 

உணவைப் பங்கு போடவும்

பங்கு போடவும் 

இணையைத் தேடவும் 

இணங்கும் நேரம் கூடவும் 

நேரம் கூடவும்


உரிமை யாவும் பெண்ணிடத்தில் 

ஆதி காலமே 

அடிமை யாக்கி மாற்றி வைத்த 

மீதி காலமே 

உரிமை யாவும் பெண்ணிடத்தில் 

ஆதி காலமே 

அடிமை யாக்கி மாற்றி வைத்த 

மீதி காலமே 


பேதம் இன்றி நாளும் 

கூடி வாழ்ந்த காலம் 

மண்ணில் திரும்பிடுமா? 

இன்பம் 

பெண்ணில் அரும்பிடுமா? 


இருவர் : ஆணுக்கு கீழ் பெண்ணை அடிமை செய்த மண்ணை 

கொன்று புதைத்திடுவோம் 

சமமாய் கொள்கை விதைத்திடுவோம்! 


இருவர் : வாழும் உயிரில் பேதம் 

வகுத்துச் சொல்லும் வேதம் 

கொன்று புதைத்திடுவோம் 

சமமாய் கொள்கை விதைத்திடுவோம்! 


-வரத.வசந்தராஜன் 

நன்னிலம்

வாலிபர் சங்க கொடிப்பாடல்

வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம் (லல ல்லா)

வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம்(லல ல்லா)

கொடியாகவே உருவானதே... எங்கள் உயிரானதே!

கடல்மேலே நீந்தும் மீன்போலே

வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம்(லல ல்லா)

வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம்


ஹே.... பறந்தாடும் கொடி பிடிக்க

பறந்தாடும் கொடி பிடிக்க

மனதோரம் வெடி வெடிக்க

மனதோரம் வெடி வெடிக்க

எல்லாரும் கல்வி பெற 

எல்லார்க்கும் வேலை வர 

பொல்லாத பூமியிலே

பொதுவுடைமை பூத்துவர

தான தந்தன தானைத்தந்தன தான தந்தன தானைத்தந்தன


ஊரெங்கும்  எங்கள் கொடி உயர்ந்தோங்கி பறந்தால்

நாடாளும் நரிகள் எல்லாம் நடுங்கும்

எங்கேனும் யாரோசிலர் மனமேங்கி அழுதால் 

அங்கேயும் எங்கள் கால்கள் நெருங்கும்

  

எட்டாத தூரம் 

தொட்டு விடக் கூடும்

இளமையின் வேகம் 

எதனையும் வெல்லும்

இன்னுமென்ன மனக்கலக்கம்

எழு தோழா கொடி பறக்கும்! 

முழக்கம் தடைகளை தகர்க்கும்


வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம் (லல ல்லா)

கொடியாகவே உருவானதே எங்கள் உயிரானதே!

கடல்மேலே நீந்தும் மீன்போலே

தந்தன தந்தா தன தான தந்தா தந்தன தந்தா தன தான தந்தா

தந்தன தந்தா தந்தன தந்தா தன தான தன தான


தாளாத பெருந் துயரம் தலைமீது சுமந்தால்

தோளாகி எங்கள் படை தாங்கும்  

கேளாத காதுகளாய் அதிகாரம் இருந்தால் 

கேட்கும்வரை எங்கள் குரல் முழங்கும்

பட்ட மரம் நாளை 

மொட்டு விடக் கூடும் 

திட்ட மிடு தோழா 

வெற்றி வந்து சேரும்!


பேதங்கள் ஒதுக்கி வைப்போம் 

பேராற்றல் கொண்டு நிற்போம்! 

ஜெயிப்போம் சபதம் முடிப்போம்!


வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம் (லல ல்லா)

வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம்(லல ல்லா)

கொடியாகவே உருவானதே எங்கள் உயிரானதே!

கடல்மேலே நீந்தும் மீன்போலே(லலலா லலலா லலலா)

Sunday, August 17, 2025

சாதிப்பெருமை எதுக்கு?

பல்லவி:

மதத்தைச் சொல்லி

மனுசனைப் பிரிச்சு வெச்சான்!
சாதியைச் சொல்லி
சந்ததியை விலக்கி வெச்சான்!

அனுபல்லவி: 
குரங்காலே வந்த மனுஷனுக்கு
குரங்காவே குணம் அமைஞ்சிருக்கு...
நாடாள வந்த நரிகளுக்கு
தோதாக சட்டம்  வளைஞ்சிருக்கு...

சரணம் 1: 
காலமெல்லாம் பாடுபட்டும் 
கஞ்சிக்கில்லை நமக்கு...
சாதி,மதப் பெருமை சொல்லி
சண்டைகளும் எதுக்கு?
வெட்டருவா வேலுகம்பு
தேவையில்லை ஒதுக்கு...
நாளைவரும்  தலைமுறைக்கு
நல்ல பூமி செதுக்கு!

எட்டு சாண் உடம்புக்குள்ள 
சாதியெங்கே இருக்கு?
சித்தர் வந்து கேட்ட பின்னும்
தீரவில்லை கிறுக்கு!

கடவுளின் பேரால் மநு 
சாதியை விதைச்சான்
சாதியைச் சொல்லி அந்த
கடவுளைப் பிரிச்சான்!

நால்வர்ணத்தை சொல்லும் நயவஞ்சத்தை
பரப்பித்தான் சிதைச்சானே நம்தேசத்தை!

சரணம் 2:
சேரிகளை எரிக்குதடா
தீண்டாமை நெருப்பு
காதலரை பிரிக்குதடா
மேல்சாதி கொழுப்பு
கலவரம் தூண்டுவதே
சாதிச்சங்க பொறுப்பு
கிடைச்சதை சுருட்டுதடா
வெக்கங்கெட்ட பொழப்பு

பட்டங்களை படிச்சிருந்தும்
மாறவில்லை வெறுப்பு
என்னசொல்லிக் கொடுத்துச்சுங்க
ஏட்டுச்சுரை படிப்பு?

வாழும் வரையிலும் மனுஷன்
தீட்டு பாக்குறான்
சாகும் போதிலும் தனிச்சுடு
காடு கேக்குறான்

சபலம் வந்தா மனுஷன் சமம் ஆகுறான்
பெண் சாதி கேக்காம சதை மேயுறான்!

சரணம் 3:
ஆதியில சாதியில்லை
அம்மணமா திரிஞ்சோம்
ஆத்தங்கரை ஓரத்துல
வேளாண்மை அறிஞ்சோம்
காட்டுல விலங்கு பயம்
கூடி வாழத் தெரிஞ்சோம்
யாருசெஞ்ச சதிவலையோ
சாதியெனப் பிரிஞ்சோம்

ஆளுக்கொரு தொழிலை செஞ்சோம்
அப்போ வந்த சாதி
அதைச்சொல்லி ஒதுக்கி வெச்சா
அது என்ன நீதி?

காலகாலமா சாதி
காவு வாங்குது
ஆலகாலமா விஷம்
ஆளைக் கொல்லுது

ஒன்னாகணும் சாதி ஒழிஞ்சாகணும்
அறிவோடு நம் பிள்ளை வளர்ந்தாகணும்!

தூய்மைப் பணியாளர்கள்


குப்பை கூலமாய் வாழ்க்கை கிடக்குது

கூட்டிப் பெருக்க ஒரு ஆளில்ல

ஊரு குப்பையை நாங்க சுமக்குறோம்

ஒத்தாசைக்கு ஒரு தோளில்லே!


தலைமுறையா இந்தத் தொழில்முறைதான்

தலைவிதியாகக் கிடக்குது?-பணி

 நிரந்தரமாக்கி நீதியைக் காக்க

எதுதான் உங்களைத் தடுக்குது?.(குப்பை)


மூக்கை பொத்துறான் மூஞ்சு சுழிக்கிறான்

நாத்தம் சகிக்காம நகர்ந்து போகுறான்-அந்த

வீச்சத்துக்குள்ள வாழ்ந்து மடியுறோம்

சூட்சுமம் புரியாம வழக்கு போடுறான்!


சாமி அழுக்கையே பாலில் கழுவுறான்

அபிஷேகமுன்னு சொல்லி வைக்கிறான்

ஊரு அழுக்கையே கழுவும் எங்களை

ஊரைவிட்டு ஏன் தள்ளி வைக்குறான்?

(குப்பை)


கொள்ளை நோய்களும் வந்த போதிலும்

கொஞ்சமும் நாங்க ஓயவில்லை

ஊரடங்குல நாடு முடங்கியும் 

உசிருக்குப் பயந்து ஒதுங்கவில்ல


பேய்மழைக் காலமும் பேரிடர் நேரமும்

தாயெனக் காத்தது யாரடா?

வாயைத் திறந்து உரிமைகள் கேட்டால்

நாயென விரட்டுதல் ஏனடா?

(குப்பை)

           

பட்டுக்குஞ்சமுன்னு பேரு வெச்சதா

பெருமை பீத்துற அரசாட்சி

துடைப்பக் கட்டையா தூக்கி வீசுதே

சமூக நீதியெல்லாம் வெறும்பேச்சு!


தேங்கி கிடக்கிற சாக்கடை அடைப்பை

சவுக்குக் குச்சிதான் எடுக்குது?

சவுக்கை எடுக்கிற காலம் வருவதை

சரித்திரம் சொல்லிக் கொடுக்குது! (குப்பை)





Friday, July 15, 2022

உயிர்

உடலும் வீழும் உயிரும் மாயம் 

உள்ளம் மட்டும் ஏற்காது!

ஊரும் பதறும் உறவும் கதறும் 

இறவா திருக்கும் நிலையேது?


பெட்டிப் பணத்தை 

கட்டி அணைத்தும்

கெட்டி இல்லை உயிரிங்கே!


இளமை மூப்பு 

எதுதான் சொல்லும் 

இறந்து படுக்கும் நாளெங்கே? 


மலமும் சலமும்

வாரும் வழிக்கும் 

நிலையில் ஆண்டுகள் கடக்கின்றார்! 


திடமாய் திரிந்த 

மனிதர் கூட 

திடுமென மரித்துக் கிடக்கின்றார்!


தடுக்கி விழுந்தே 

இறந்தவருண்டு

தலையடி பட்டும் தப்பிப்பார்!


குண்டைத் தாங்கி 

வாழ்ந்தவர் கூட 

குண்டூசி குத்தி மரணிப்பார்! 


எங்கோ ஓருயிர் 

மடிந்தது கேட்டால் 

முடிந்தது விதியெனக் கூறிடுவார்! 


இறந்தவர் தமக்கு 

உரியவர் என்றால் 

எமனையும் வெட்டிக் கூறிடுவார்!  


மரணம் ஏற்க முடியாமல் 

மறுமை என்பதை மனம் ஏற்கும்! 

சரணம் இறையெனக் கிடந்தாலும் 

கிழமை பார்த்தா உயிர் போகும்?


உயிரின் இருப்பு எதிலென்றால் 

துடிப்பில் என்பதே சரியாகும்! 

இறப்பு எதிலே இருக்கிறதென்றால் 

பிறப்பில் என்பதே பதிலாகும்!


-வரத.வசந்தராஜன்

  நன்னிலம்

ஹிப் ஹாப் வடிவில் ஒரு முயற்சி

 நண்பா....

நீ வா வீதிக்கு

நாங்கள் சொல்லும்‌ தேதிக்கு!

சட்டம் இங்கே யாருக்கு?- எனச் 

கேட்கும் மறியல் போருக்கு!


பதிவுகள் மட்டும் போதுமா?-நீ களத்துக்கு வந்தால் பாவமா? 

எதிர்த்து கேள்வி கேட்காமல் 

சட்டையை பிடித்துக் குலுக்காமல் 

பதில் தருமா? மனம் வருமா? 

மயிலே மயிலே என்றால் 

இறகிடுமா? சரிப்படுமா? 


இதுவரை இங்கே இருப்பது- அதில் எதுதான் தானாய் கிடைத்தது?

மூடிய கதவுகள் தெறிக்கும்-உன்

முஷ்டியில்  மோது பிளக்கும்

மடை திறக்கும்! விடை பிறக்கும்!

விழித்தது இளையோர் கூட்டம்

இனிதூங்குமா? புவிதாங்குமா?


இனியும் என்ன யோசனை?- அட 

எத்தனை நாளிந்த வேதனை?

ஒரு சிலருக்கு நாடா?- நாம் 

ஒன்றாய் இணைவோம் வாடா! 

படை வெல்லும்! பகை கொல்லும்!

மேடுகள் பள்ளம் நிரப்ப

எடு ஆயுதம்! அறிவாயுதம்?


எல்லாம் இறைவன் விதித்தது- என 

எவன்தான் சொல்லிக் கொடுத்தது?

வேதங்கள் சொல்வது மூடம்- நாம் 

படித்தோம் இயங்கியல் பாடம்!

வரும் நேரம்! நிலைமாறும்! 

நெருக்கடி இன்னும் முற்றும் 

போர் மூளும்! பொதுவாகும்! 


-வரத.வசந்தராஜன்

ராமர் கோயில்

 ராமனுக்கு கோயில்கட்டும் இந்தநாட்டுல 

ராத்தங்க குடிசையில்லை சனங்க ரோட்டுல!

லெட்சுமண சீதையோடு அடர்ந்த காட்டுல -ராமன்

வனவாசம் போனகதை கம்பன் பாட்டுல!


அடிக்கல்லு நாட்டுறாங்கே ஆடம்பரமா

அனுமன்சேனை ஆட்டுதடா ஆடுடாராமா!

கடவுளென கையெடுத்துக் கும்பிடலாமா

காவிக்கூட்ட பக்தியினை நம்பிடலாமா?


சத்திரிய வம்சத்தில் வந்த ராமனை

சங்கிராமன் ஆக்குதடா ஆரியசேனை

கார்ப்பரேட்டாய் மேயவந்த மாரீசமானை -விட்டு

கருவாட்டுப் பாத்திரத்தை காக்கிற பூனை!


அமைதியினைத் தருவதுதான் ஆன்மீகமே

ஆயுதத்தைத் தூக்குவது அறிவீனமே

அரியணையை விட்டுத்தந்த அவதாரமே- அதை

அரசியல் கருவியாக்கல் அவமானமே! 


அகிலமெல்லாம் ஆண்டவனின் இருப்பிடம்

அயோத்தியில் மட்டுமா பிறப்பிடம்?

சீதையவள் கற்புரைத்தாள் நெருப்பிடம்- உங்கள்

சீராமன் ஆட்சியின்றும் செருப்பிடம்! 


பரதனுக்கு நாடுதந்து காடுசென்றவன்

பாபருக்கு மட்டுமென்ன மறுத்திடுவானா?

குகனிடத்தில் தேனும்மீனும் வாங்கித்தின்றவன் -அவன்

குலத்தவன் படையலிட்டால் வெறுத்திடுவானா? 


ரதங்களின் யாத்திரை முடியட்டும் -இனி 

நிஜங்களின் நித்திரை கலையட்டும்!

மனங்களில் மதவெறி ஒழியட்டும் -இனி 

சனங்களில் சமத்துவம் பெருகட்டும்!


வரத.வசந்தராஜன்

நன்னிலம்