சிங்கத்தின் வாயில் நம் தலையிருக்கு
சிலந்திக ளோடென்ன வம்பு வழக்கு?
மலைகளை பிளப்பது நம் இலக்கு
மணல் துகளோடு பேச்செதுக்கு?
புலிகளை வீழ்த்த புறப்பட்ட பின்பு
புள்ளிமான் எதிர்ப்படும் சீண்டாதே!
அம்புகள் வழியில் யோசனை செய்தால்
அதுபோய் குறியினைத் தீண்டாதே!
சூரியக் கிரணங்கள் சுடுகிறதென்று
கடல்நீர் அழுது கிடப்பதில்லை...
கூரிய ஏர்மூனை கீறுவதாக
வயல்வெளி உழுதிட மறுப்பதில்லை!
தவளைகள் தமக்குள் முட்டிக்கொண்டால்
எலிகள் நேரத்தைப் பார்த்திருக்கும்!
எலிகளுக் கிடையிலும் சண்டையென்றால்
பாம்புகள் பகையுடன் காத்திருக்கும்!
பொதுவில் நமக்கொரு எதிரியுண்டு
போகிற வழியினில் உதிரியுண்டு
எதிரி யாரெனத் தெளிந்திடுவோம்
உதிரிகள் கூச்சலை ஒதுக்கிடுவோம்!
No comments:
Post a Comment