பாடுபட்டா பலன் கிடைக்கும்
பெரியவங்க சொன்னாங்க- நான் படுற பாட்டை பாத்துப்புட்டு
வாயடைச்சு நின்னாங்க...
நட்ட பயிரு வெளயலயே
நாளுக்கு நாள் காயுது; தினம் சாயுது -தப்பி
வெளஞ்சதுக்கும்
விலையில்லையே
விதியை எண்ணி நோகுது; சனம் சாகுது!
(பாடு பட்டா)
புண்ணாக்கு போதலன்னு
காளை மாடு முட்டுது; கொம்பு குத்துது -ஒரு
புடவை வாங்க வக்கில்லன்னு
பொஞ்சாதி திட்டுது! சும்மா கத்துது!
(பாடு பட்டா)
வாரம் வாரம் வாசலுல
குழுவு பொண்டுக கூடுது; சத்தம் போடுது- பணம்
வாங்கும் போது இனிச்சுதானு
நாக்கைப் புடுங்க கேக்குது; ஊர் பாக்குது!
(பாடு பட்டா)
சேட்டு கடை தாண்டும்போது
சின்னப் பொண்ணு ஞாபகம்; கடை போனதும்- அவ
தோட்டுத் தொங்கல் வட்டி கேட்டு
மீட்டுத் தர தாமதம்; இன்னும் தாமதம்!
(பாடு பட்டா)
வய வரப்பு களத்துலயே
எங்க பொழப்பு முடியுது; புள்ள தொடருது- அட
எந்தக் காலம் சூரியனும்
ஏழை வீட்டில் விடியுது? ;ஒளி படருது?.
(பாடு பட்டா)
-வரத.வசந்தராஜன்
நன்னிலம்.
No comments:
Post a Comment