Friday, July 15, 2022

ராமர் கோயில்

 ராமனுக்கு கோயில்கட்டும் இந்தநாட்டுல 

ராத்தங்க குடிசையில்லை சனங்க ரோட்டுல!

லெட்சுமண சீதையோடு அடர்ந்த காட்டுல -ராமன்

வனவாசம் போனகதை கம்பன் பாட்டுல!


அடிக்கல்லு நாட்டுறாங்கே ஆடம்பரமா

அனுமன்சேனை ஆட்டுதடா ஆடுடாராமா!

கடவுளென கையெடுத்துக் கும்பிடலாமா

காவிக்கூட்ட பக்தியினை நம்பிடலாமா?


சத்திரிய வம்சத்தில் வந்த ராமனை

சங்கிராமன் ஆக்குதடா ஆரியசேனை

கார்ப்பரேட்டாய் மேயவந்த மாரீசமானை -விட்டு

கருவாட்டுப் பாத்திரத்தை காக்கிற பூனை!


அமைதியினைத் தருவதுதான் ஆன்மீகமே

ஆயுதத்தைத் தூக்குவது அறிவீனமே

அரியணையை விட்டுத்தந்த அவதாரமே- அதை

அரசியல் கருவியாக்கல் அவமானமே! 


அகிலமெல்லாம் ஆண்டவனின் இருப்பிடம்

அயோத்தியில் மட்டுமா பிறப்பிடம்?

சீதையவள் கற்புரைத்தாள் நெருப்பிடம்- உங்கள்

சீராமன் ஆட்சியின்றும் செருப்பிடம்! 


பரதனுக்கு நாடுதந்து காடுசென்றவன்

பாபருக்கு மட்டுமென்ன மறுத்திடுவானா?

குகனிடத்தில் தேனும்மீனும் வாங்கித்தின்றவன் -அவன்

குலத்தவன் படையலிட்டால் வெறுத்திடுவானா? 


ரதங்களின் யாத்திரை முடியட்டும் -இனி 

நிஜங்களின் நித்திரை கலையட்டும்!

மனங்களில் மதவெறி ஒழியட்டும் -இனி 

சனங்களில் சமத்துவம் பெருகட்டும்!


வரத.வசந்தராஜன்

நன்னிலம்

No comments:

Post a Comment