நண்பா....
நீ வா வீதிக்கு
நாங்கள் சொல்லும் தேதிக்கு!
சட்டம் இங்கே யாருக்கு?- எனச்
கேட்கும் மறியல் போருக்கு!
பதிவுகள் மட்டும் போதுமா?-நீ களத்துக்கு வந்தால் பாவமா?
எதிர்த்து கேள்வி கேட்காமல்
சட்டையை பிடித்துக் குலுக்காமல்
பதில் தருமா? மனம் வருமா?
மயிலே மயிலே என்றால்
இறகிடுமா? சரிப்படுமா?
இதுவரை இங்கே இருப்பது- அதில் எதுதான் தானாய் கிடைத்தது?
மூடிய கதவுகள் தெறிக்கும்-உன்
முஷ்டியில் மோது பிளக்கும்
மடை திறக்கும்! விடை பிறக்கும்!
விழித்தது இளையோர் கூட்டம்
இனிதூங்குமா? புவிதாங்குமா?
இனியும் என்ன யோசனை?- அட
எத்தனை நாளிந்த வேதனை?
ஒரு சிலருக்கு நாடா?- நாம்
ஒன்றாய் இணைவோம் வாடா!
படை வெல்லும்! பகை கொல்லும்!
மேடுகள் பள்ளம் நிரப்ப
எடு ஆயுதம்! அறிவாயுதம்?
எல்லாம் இறைவன் விதித்தது- என
எவன்தான் சொல்லிக் கொடுத்தது?
வேதங்கள் சொல்வது மூடம்- நாம்
படித்தோம் இயங்கியல் பாடம்!
வரும் நேரம்! நிலைமாறும்!
நெருக்கடி இன்னும் முற்றும்
போர் மூளும்! பொதுவாகும்!
-வரத.வசந்தராஜன்
No comments:
Post a Comment