Sunday, August 17, 2025

சாதிப்பெருமை எதுக்கு?

பல்லவி:

மதத்தைச் சொல்லி

மனுசனைப் பிரிச்சு வெச்சான்!
சாதியைச் சொல்லி
சந்ததியை விலக்கி வெச்சான்!

அனுபல்லவி: 
குரங்காலே வந்த மனுஷனுக்கு
குரங்காவே குணம் அமைஞ்சிருக்கு...
நாடாள வந்த நரிகளுக்கு
தோதாக சட்டம்  வளைஞ்சிருக்கு...

சரணம் 1: 
காலமெல்லாம் பாடுபட்டும் 
கஞ்சிக்கில்லை நமக்கு...
சாதி,மதப் பெருமை சொல்லி
சண்டைகளும் எதுக்கு?
வெட்டருவா வேலுகம்பு
தேவையில்லை ஒதுக்கு...
நாளைவரும்  தலைமுறைக்கு
நல்ல பூமி செதுக்கு!

எட்டு சாண் உடம்புக்குள்ள 
சாதியெங்கே இருக்கு?
சித்தர் வந்து கேட்ட பின்னும்
தீரவில்லை கிறுக்கு!

கடவுளின் பேரால் மநு 
சாதியை விதைச்சான்
சாதியைச் சொல்லி அந்த
கடவுளைப் பிரிச்சான்!

நால்வர்ணத்தை சொல்லும் நயவஞ்சத்தை
பரப்பித்தான் சிதைச்சானே நம்தேசத்தை!

சரணம் 2:
சேரிகளை எரிக்குதடா
தீண்டாமை நெருப்பு
காதலரை பிரிக்குதடா
மேல்சாதி கொழுப்பு
கலவரம் தூண்டுவதே
சாதிச்சங்க பொறுப்பு
கிடைச்சதை சுருட்டுதடா
வெக்கங்கெட்ட பொழப்பு

பட்டங்களை படிச்சிருந்தும்
மாறவில்லை வெறுப்பு
என்னசொல்லிக் கொடுத்துச்சுங்க
ஏட்டுச்சுரை படிப்பு?

வாழும் வரையிலும் மனுஷன்
தீட்டு பாக்குறான்
சாகும் போதிலும் தனிச்சுடு
காடு கேக்குறான்

சபலம் வந்தா மனுஷன் சமம் ஆகுறான்
பெண் சாதி கேக்காம சதை மேயுறான்!

சரணம் 3:
ஆதியில சாதியில்லை
அம்மணமா திரிஞ்சோம்
ஆத்தங்கரை ஓரத்துல
வேளாண்மை அறிஞ்சோம்
காட்டுல விலங்கு பயம்
கூடி வாழத் தெரிஞ்சோம்
யாருசெஞ்ச சதிவலையோ
சாதியெனப் பிரிஞ்சோம்

ஆளுக்கொரு தொழிலை செஞ்சோம்
அப்போ வந்த சாதி
அதைச்சொல்லி ஒதுக்கி வெச்சா
அது என்ன நீதி?

காலகாலமா சாதி
காவு வாங்குது
ஆலகாலமா விஷம்
ஆளைக் கொல்லுது

ஒன்னாகணும் சாதி ஒழிஞ்சாகணும்
அறிவோடு நம் பிள்ளை வளர்ந்தாகணும்!

No comments:

Post a Comment