Thursday, July 2, 2020

கிணற்றுத் தவளைகள்

பார்வைக்கு அப்பாலும் 
பிரபஞ்சம் உண்டென்று 
போர்வைக்குள் கிடப்போர்க்கு யார் சொல்லுவார்? 
போர்வைக்கோல் மேலேறி பிறைநிலா 
தொடுமென்று 
வேர்வைக்கும் எண்ணத்தை யார் வெல்லுவார்?  

முதுகுக்கு பின்னாலே நடப்பதை அறியாமல் 
கழுகுக்கு இரையாகும் கோழிக்குஞ்சே!
வாழ்வுக்கு வழிகாட்ட வாவென அழைத்தாலும் 
வீம்புக்கு வெளிச்சென்றால் யார் பேணுவார்? 

நல்லதை பொறுக்காமல் நலம்நாடி கிடக்காமல்
அல்லதை அழகென்று அதைத்தேடி அடைவோரும்
பொல்லதை உணராமல் பொய்யாலே மயக்கிட
வல்லதை சேர்வோரும் பின் நாணுவார்?

பட்டத்தின் மீதேறி  பறக்கிற ஆசையில் 
விட்டத்தில் தானேறி தேடுவார் நூலேணி- ஒரு
கட்டத்தில் பித்தேறி கண்டதை பேசிச்சிறு 
வட்டத்தில் பிடுங்குவார் தேவையில் லாஆணி!

விண்ணறிவை அறிந்தவனை விஞ்ஞானி எனக்கொள்வோம்
மண்ணறிவை உணர்ந்தவனை விவசாயி எனச்சொல்வோம்
தன்னறிவை அளந்தவனை தற்பெருமை எனத்தள்ளி 
நுண்ணறிவை உடையவனை நுட்பத்தால் நாமறிவோம்! 

-வரத.வசந்தராஜன்

No comments:

Post a Comment