Monday, July 6, 2020

கொரானா நிவாரணம்

அண்ணாத்தே சொன்னது எல்லாம் சரி
அவசியங் கேளுங்க வரிக்கு வரி
அன்னாடங் காய்ச்சிக்கு என்ன வழி? 
அதைச்சொல்லாம எதுக்கு இந்தக் கிழி!

பொல்லாத வைரஸை இல்லாம ஒழிக்க
செல்லாதே வெளியே பரவாம தடுக்க
லக்ஷ்மண ரேகையை போட்டாரு குறுக்கே
ராமனின் சேனைகள் நரம்பெல்லாம் புடைக்க
                                            (அண்ணாத்தே)
மூவேழு நாளுக்கு முடங்குது நாடு
தீவாக மாறணும் தனித்தனி வீடு
வாவென அழைக்குது வைரஸின் காடு
வருவழி அடைக்கணும் வீட்டுக்குள் ஓடு
                                              (அண்ணாத்தே)
கூட்டத்தில் பரவும் வாய்ப்புகள் பெற்று
சங்கிலித் தொடராக பெருகுது தொற்று
வளர்ந்த நாடுகள் அனுபவம் கற்று 
தனிமையில் இருப்பதே நம்தேசப் பற்று 
                                            (அண்ணாத்தே)
பின்னாலே போகுமாம் பொருளா தாரம் 
முன்னாலே ஒசந்ததா உண்டா ஆதாரம்
ஓடாத குதிரைக்கு சறுக்குமாம் ஓரம் 
ஆடாத காலுக்கு அமைஞ்சது நேரம்
                                           (அண்ணாத்தே)  
வேலைக்குப் போனாதான் வேளைக்குச் சோறு
வேதனை சொல்லாம வாழ்கின்ற பேரு
வீட்டுக்குள் அடைந்தால் என்னாகும் பாரு
வயிற்றுக்குச் சோறிட வழியுண்டா கூறு.   
                                                  (அண்ணாத்தே)
தாய்மார்பில் பாலின்றி இளையது கத்த
தலைச்சனும் கேக்குது ஏன் என்னை பெத்த?
வாழ்வுக்கு வழிசொல்லா வார்த்தைகள் சொத்தை
வெறும்வாயால் பந்தலைப் போடுற வித்தை
                                                  (அண்ணாத்தே)

கார்ப்பரேட் மானிய கரன்சியை உருவி 
காய்ப்புகள் காய்த்த கரங்களைத் தழுவி
உணவுக்கும் மருந்துக்கும் சிறுதொகை உதவி
கடனுக்கும் குழுவுக்கும் விடுப்பினை அறிவி
                                                     (அண்ணாத்தே)

வரத.வசந்தராஜன்

No comments:

Post a Comment