அண்ணலிடம் ஊற்றெடுக்கும்
அறிவார்ந்த தத்துவங்கள்
கண்ணொளியை இழந்தவரும்
கண்டுணரும் மகத்துவங்கள்
பார்முழுதும் அலைந்தாலும் கிடைக்காது வேறெங்கும்?
பாரதத்தாய் கிரீடத்தில் மின்னுகிற ஒருதங்கம்!
தாழ்த்தப்பட்ட மக்கள் கையில் ஏந்துகிற ஒளிவிளக்கு
வீழ்த்தப்பட்ட ஓரினமே வணங்குகிற தனிக்கிழக்கு!
பார் புகழும் சட்ட மேதை!
பாரிஸ்டர் பட்ட மேதை!
பாமர மக்களின் பிரதி நிதியென
வட்டமேஜை மனதை தொட்ட மேதை!
பஞ்சப் பரம்பரை நெஞ்சத்தில் நீ
யாரும் தூண்டாமல் ஒளிரும் 'மகர'ஜோதி!
பிஞ்சில் நொந்த அனுபவம் தந்தது
பாழும் தீண்டாமை சாக்காடு தகர நீதி!
மனிதருக்குள் சிலபேரை மட்டமென எண்ணியோரை
மநுதர்ம தந்திரத்தை வேதமென பண்ணியோரை
அம்பலப்படுத்த அண்ணல் வந்தார்!
பலநூறு ஆண்டுகளாய் சாதிசொல்லி தாழ்த்தியதை
பல்வேறு படிகளாய் தீண்டாமை வீழ்த்தியதை
அப்புறப்படுத்த சட்டம் தந்தார்!
ஆராய்ந்த நூல்கள் ஆயிரம் இருந்தாலும்
அணியாத நூல்தான் அவரறிவை அளந்தது!
ஞானியாய் பின்னாளில் நாடறிய திகழ்ந்தாலும்
கோணியில் அமரவைத்த கொடுமையும் நடந்தது!
ஏதுமற்ற மக்களுக்கேன் நெருக்கடிகள்?
எத்தனைநாள் பொறுப்பதிந்த நுகத்தடிகள்?- என
எழுப்பிய கேள்வியெல்லாம் சவுக்கடிகள்
என்னபதில் சொல்லும்சாதி கைத்தடிகள்?
பிராமண சத்ரிய வைசியரும்
பஞ்சமரோடு சூத்திரரும்
புழங்கிட வேண்டும் பொதுவீதி- என
புலப்பட உரைத்தார் சமநீதி!
உயர்வெனல் தாழ்த்துதல் அவமதிப்பு
ஒதுக்கிப் பிரிக்கிற அருவருப்பு!
ஒவ்வொரு மனிதனும் ஒரேமதிப்பு
பெறும்வரை சுதந்திரம் புறக்கணிப்பு!
பித்தம் பிடித்தவர் நடத்திடும் வர்ணம்
தத்தம் சாதியை உயர்த்திடும் எண்ணம்
முற்றும் தீரவும் நெறியினைக் கண்டார்
புத்தம் சேரவும் வழியினைச் சொன்னார்!
மேல்நாட்டு மார்க்சுக்குப் பிந்தையவர்
தென்னாட்டு பெரியாரின் சிந்தையவர்
நம்நாட்டு அரசமைப்பின் தந்தையவர் - சாதி
கைநாட்டு வெறியர்களின் விந்தையவர்!
அம்பேத்கர் பேருரைத்தால் பாமரருக்கு சிலிர்த்திடும் இப்போதும்!
அண்ணலெனும் பேரொலித்தால்
பாதகருக்கு வியர்த்திடும் எப்போதும்!
-வரத.வசந்தராஜன்
No comments:
Post a Comment