Sunday, July 5, 2020

தனியார் மயம்

முச்சந்தியில் கடைபரப்பி கூவி- நாட்டை 
மூட்டைகட்டி விக்குதுங்க காவி!
திருடன்கையில் தந்தோமே சாவி -இனி 
ஆவதென்ன அழுதுபுலம்பி கேவி!

தனியாரு மடியில தற்சார்பை தேடுது
முதலாளி நிழலுல முட்டிரெண்டும் தேயுது
போகாத ஊருக்கு வழிதேடி நிக்குது
ஆகாத கதைசொல்லி பொதுத்துறையை விக்குது...

அரசுத்துறையில் லஞ்சம் ஊழல் தொல்லையாம்
அதுவெல்லாம் தனியாரில் இல்லையாம்
தனியாரில் தில்லுமுல்லு நடக்குதுங்க- இந்த 
தற்குறிகள் தெரியாம பேசுதுங்க! 

பரதேசிக் கோலமா நாடு கிடக்குது- அரசு
பட்டுசட்டைக் காரனுக்கு பட்டன் தைக்குது
பிச்சைக்காரன் தட்டுலயும் பங்கு கேக்குது
பணக்கார கூட்டத்துக்கு பந்தி வைக்குது! 

மக்களாட்சி என்பதெல்லாம் பேருக்கு தாங்க- இங்கு
மகுடமெல்லாம் ஏய்ச்சுபொழைக்கும் ஆளுக்கு தாங்க?
வாயைப்பொத்தி இருப்பதால வாழ்க்கை மாறுமா? -நாம
வர்க்கமாக சேராம வசந்தம் வீசுமா?

கண்ணெதிரே கொடுமை கண்டு சினப்படு தோழா
கயவர்களை தோலுரிக்க புறப்படு தோழா!
          -வரத.வசந்தராஜன்

No comments:

Post a Comment