Saturday, July 4, 2020

மலக்குழி மரணம்

ஏழைங்க செத்தா கணக்கில்லையா? -அட 
எவனுக்கும் காதுல கேக்கலயா? 
பாவிங்க வாழும் உலகத்துல -பஞ்ச 
பரம்பரை வாழ வழியில்லையா? 

மலக்குழி எங்களின் சவக்குழியாய்
மாறுது எத்தனை தலைமுறையாய்? 
சாதியம் என்கிற புதைகுழியால் 
நாறுது நாடே சாக்கடையாய்!

கடலின் அடியில் கிடப்பதையும்
கண்டு பிடிக்க கருவிகளா?
மண்ணில் புதைந்த வளங்களையும் 
தோண்டி எடுக்க வருவீகளா?

சந்திர செவ்வாய் கோளுக்கும் 
எந்திரம் அனுப்புதல் சாதனையா?
சாக்கடை அடைப்பை கருவிகளால்
போக்கிட அறிவியல் போதலையா?

திங்குற கையால் அள்ளுகிறோம்
தலைவிதி எண்ணி வெம்புகிறோம்
சாதியம் பேசும் மனிதர்களை 
சாக்கடைப் புழுவாய் எண்ணுகிறோம்!

கழிப்பறை எங்களின் கருவறையாய்
கடவுளை காண்கிறோம் மலவடிவாய்
தூணிலும் துரும்பிலும் இருப்பானா?
தூய்மைப் பணியை வெறுப்பானா?
            
                                         -வரத.வசந்தராஜன்

No comments:

Post a Comment