மன அழுத்தமா நெஞ்சழுத்தமா?
மனசு இருந்தா சொல்லுங்க...
கதறலைக் கேட்டும் இரக்கமில்லியா
காக்கிகள் மனசு கல்லுங்க...
அடா புடான்னு கூப்பிடுவாரு
தடா பொடான்னு மிரட்டிடுவாரு
ஆண்டவன் ரோட்டுல வந்தாலும்
அக்யூஸ்டை போல தடுத்திடுவாரு...
கண்ணுல மாட்டுனா சேதாரம்
காட்டச் சொல்லுவார் ஆதாரம்
உரிமையைக் கேட்டா வீண்வாதம்
அதுக்கும் போடுவார் அபராதம்!
கெட்ட வார்த்தைகள் அத்தனையும்
காவல்துறைக்கு அத்துப்படி
இப்படிப் பேச வழியிருக்கா
இபிகோவின் சட்டப்படி..?
தள்ளுவண்டி அண்ணாச்சியும்
மல்லுக்கட்டணும்
தரைக்கடை ஆளுங்களும் மாமுல்வெட்டணும்
லாரி வேனு ஓட்டுநரும்
லஞ்சப்பணம் அள்ளி நீட்டணும்!
கள்ளநோட்டு கும்பலுக்கும்
கனிமவள திருடனுக்கும்
சலாம் போடுவார்- குனிஞ்சு
சலாம் போடுவார்!
பொதுசேவை செய்பவரை
போராட்டக் காரர்களை
போட்டுத் தள்ளுவார்- துணிஞ்சு
போட்டுத் தள்ளுவார்!
டாஸ்மாக் வாசலிலே
காவல் இருப்பார்
தடைகேட்டு போராடினால்
காலில் மிதிப்பார்!
உயர் அதிகாரிகளின்
ஏவல் முடிப்பார்
காய்கறிகள் வாங்கித்தந்து
சேவல் பிடிப்பார்!
ஏழைகள் என்றால் இளக்காரம்
எவன் கொடுத்தான் அதிகாரம்?
மருந்துக்கும் இல்லை மனசாட்சி
மாற்றிச் சொல்லுவார் பொய் சாட்சி!
திருப்பி அடித்தால் அவமானம்
தெரிந்து நடந்தால் தன்மானம்
கையில் எடுப்போம் லத்தியை
கற்று கொடுப்போம் புத்தியை!
No comments:
Post a Comment