Tuesday, September 8, 2020

என்னைப் பெத்த அப்பா

 உசிரா இருக்கும் வரைக்கும் 

அருமை தெரியவில்லை- அவர் 

உருவம் கண்ணுக் குள்ள 

இன்னும் மறைய வில்லை!

விலை யென்ன கேட்காம 

வாங்கிக் கொடுத்த அப்பா- அவர் 

வேதனையைத் தெரிஞ்ச அம்மா 

என்னை அதட்டி வெப்பா!


தீவாளி பொங்கலுக்கு                      துணியெடுக்கப் போனாலும்

தெனக்கூலி தீர்ந்துபோயி வட்டிவாங்கி வந்தாலும் 

ஆளுக்கு ரெண்டுசட்டை 

எடுத்துக் கொடுத்த அப்பா-அவர் 

மேலுக்குப் போட மட்டும் 

பத்து வருஷ ஜிப்பா!         (உசிரா)


எண்ணெய்தேச்சு குளிக்கவைக்க

என்னைபாடு படுத்துவாரு

கண்ணில் சீக்கா விழுந்ததுக்கு கலங்கி அவரு தவிப்பாரு

சைக்கிளு பாரில்சின்ன

சீட்டு வெச்ச அப்பா - என் 

செருப்பில் பதிஞ்ச முள்ளை 

வாயில் கடிச்ச அப்பா!            (உசிரா)


கறிசோறு சமைச்சாலும் 

எலும்பு மட்டும் கடிச்சிகிட்டு

கையால நெறடிப்பாத்து 

கறி எடுத்து நீட்டுவாரு

தொண்டைக்கு போன முள்ளை 

தோண்டி எடுத்த அப்பா -எனக்கு‌

நண்டுகால் கடிக்கும்போது 

எச்சில் பட்டா தப்பா! (உசிரா)


திருவிழா கூட்டத்துல நான்தொலைஞ்சு போவேன்னு

திண்பண்டம் வாங்கித்தந்து 

தோளில்தூக்கி வெப்பாரு 

கோபுரம் என்னைவிட 

ஒசரம் கம்மியப்பா -அந்த 

கோயிலு சாமிதானே 

என்னை பெத்த அப்பா!           (உசிரா)


-வரத.வசந்தராஜன்

நன்னிலம்.


No comments:

Post a Comment