கருப்போ சிவப்போ குட்டை நெட்டையோ
கடவுளைத் தேடி அலையுறேன்!
ஆணோ பெண்ணோ அர்த்த நாரியோ
அருவம்தானோ குழம்புறேன்!
கடவுள் இதுவரை தென்படவில்லை
கருவறைக் குள்ளும் கண்படவில்லை
இருக்கு இல்லை என்கிற பேச்சால்
இறைவன் மனது புண்படவில்லை!
ஊரைக்கூட்டி தேரை இழுக்கும்
உற்சவத்துக்கும் அவன் வரவில்லை...
உரக்கக்கூவி அழைத்தபோதும்
இரக்கப்பட்டு இறங்கவுமில்லை... (கருப்போ)
ஏழையின் சிரிப்பில் இருப்பதுமில்லை
ஏழைகள் யாரும் சிரிப்பதுமில்லை
சிறப்பு தரிசன வரிசையில் நின்றும்
செருப்பின் கவலை விடுபடவில்லை!
கோவில்உண்டியில் கோடிகொட்டியும்
கோமான்வீட்டில் குடிவரவில்லை...
சேரியின்கால்கள் தொடாத இடத்தில்
சிலையின் நிழலும் அடிபடவில்லை...
(கருப்போ)
தூணிலுமில்லை துரும்பிலுமில்லை!
அணுவிலுமில்லை அதனுள்ளுமில்லை!
விஞ்ஞானத்தில் புலப்படவில்லை
அஞ்ஞானத்தில் அகப்படவில்லை!
மனதின் அழுக்கை வெளுப்பதையன்றி
மதத்தின் நோக்கம் வேறெதுமில்லை...
இன்னொரு மதத்தை வெறுப்பதையன்றி
இறைவனை அடையும் வழியதிலில்லை... (கருப்போ)
பூசைகள் செய்தார் பார்த்ததுமில்லை
புதுப்பிக்கின்றார் பயனெதுமில்லை
ஆடம்பரமாய் விளக்குகள் கட்டி
அலப்பறை செய்தும் அங்கேயுமில்லை...
அகன்றக்கொடியை பறக்க விட்டும்
ஆண்டவன் ஏனோ எங்கேயுமில்லை... (கருப்போ)
தேடித் தேடித் தெம்பு மில்லை
தேடா விட்டால் வம்பு மில்லை
நம்பித் தொலைத்தால் சங்கடமில்லை
நம்பா விட்டால் சஞ்சல மில்லை
இருப்பைச் சொல்ல சான்றுகள் இல்லை
இல்லை என்பதற் கதுதான் எல்லை!
(கருப்போ)
No comments:
Post a Comment