பூவரசோ மாமரமோ -உன்
பூமேனி செம்மரமோ!
மஞ்சனத்தி உன்முகமோ
மணக்கும் சந்தனமோ!
பலமரமும் பாத்துவந்தா
ஒரு மரமும் புடிக்காது- நான்
பாத்தது ஒத்தை மரம்
பளபளக்கும் தேக்கு மரம்!
கட்டில் காலாட்டம்
கட்டழகே நீ கெடச்சே...
பட்டை பழுதும்இல்லே
பக்குவமா நீ சிரிச்சே...
காத்துல படபடக்கும
சன்னல் கதவாட்டம் -உன்
இமைமூடி திறக்கையில
இதயம் நின்னுதுடிக்குதடி!
கடைசல் போட்டதுபோல்
கச்சிதமா ஒடம்பிருக்கு- உன்
கண்ணுமுழி ரெண்டும் என்னை
துளைபோட்டு கோக்குதடி!
இழைப்புளி இல்லாம
இழைச்ச தேகம் பாத்து- மனசு
பசையேதும் போடாம
பச்சக்குன்னு ஒட்டுதடி!
முக்காலி சடைபோட்டு
முன்னாடி நீநடந்தா- காலு
தெக்கால வடக்கால
திசைமாறி நொடிக்குதடி
சத்திரத்து நிலையைவிட
சாணளவு ஒசந்தவளே- உன்னை
உத்திரத்து தூணைப்போல
உள்ளங்கையில் தாங்குவேன்டி!
மூங்கில் ஆணிபோல
மனசுல பதிஞ்சவளே - நான்
ஏங்கித் தவிக்கிறனே
எப்போவர தாழ் போட?
-வ.வசந்தராஜன்
நன்னிலம்.
No comments:
Post a Comment