கல்வி கொள்கையா? இது காவிக் கொள்கையா?
ஏழை சாதிக்கு இனி கல்வி இல்லையா?
பால்குடியை மறக்கும் முன்னே
பள்ளிக்கூடம் வரணுமா?
ஆய்கழுவப் பழகும் கையில்
அரிச்சுவடி தரணுமா?
மூன்று வகுப்பு தாண்டும் போது
பொதுத் தேர்வு வைப்பதா?
கண்விழித்துப் பார்க்கும் போது
இமை இரண்டை தைப்பதா? (கல்வி கொள்கையா)
தாய் மொழியை தள்ளிவைத்து
இந்தியைத் திணிப்பதா?
இறந்து போன சமஸ்கிருதம்
இவர்களுக்கு இனிப்பதா?
மூன்று மொழி சுமையேற்றி
பிஞ்சுகளை வதைப்பதா?
மதிப் பெண்ணை இலக்காக்கி
தனித்திறனை சிதைப்பதா? (கல்வி கொள்கையா)
மதங்கள் சொல்லும் மடத்தனத்தை
பாடங்களில் நுழைப்பதா?
அறிவியலை தவிக்க விட்டு
ஆன்மீகம் தழைப்பதா?
பொய்யும் புரட்டும் சேர்த்தெழுதி
சரித்திரத்தை திரிப்பதா?
புராணப் புளுகு மூட்டைகளை
பிஞ்சு முதுகு சுமப்பதா? (கல்வி கொள்கையா)
அப்பன் பாட்டன் செய்த தொழிலை
பகுதி நேரம் பார்ப்பதா?
அன்று ஒழிந்த குலக்கல்வி
இன்று வந்து சேர்ப்பதா?
சமூக நீதி தழைக்கத் தானே
சாதி இட ஒதுக்கீடு!
சனாதானம் வளரத் தானே
சங்கி செய்யும் குறுக்கீடு! (கல்வி கொள்கையா)
கலை அறிவியல் பாடத்துக்கும்
கடின நுழைவுத் தேர்வா?
வேலை யின்மை பிரச்சினைக்கு
குறுக்கு வழியில் தீர்வா?
சந்தை போல கல்வி முறையை
பார்க்குதடா கார்ப்ப ரேட்டு
நொந்த ஏழை சனங்களுக்கு
கையிலேது கரன்சி கட்டு? (கல்வி கொள்கையா)
சங்கம் வைத்துப் போராடும்
உரிமையினை மறுப்பதா?
அரசு செய்யும் அடக்குமுறை
அடிமை போல பொறுப்பதா?
குரல் வளையை நெறித்திடத் தான்
காவிக் கூட்ட கூப்பாடு!
பொம்மை போல தலையை ஆட்ட
மாற்றி வைக்க ஏற்பாடு! (கல்வி கொள்கையா)
அடுக்களையில் மீண்டும் பெண்ணை
அடைக்கிறதா உயர்கல்வி?
வகுப்பறையில் சரி சமமாய்
கிடைக்கிறதா பெண்கல்வி?
காவிக் கூட்டம் தலையிடத்தான்
லோக்கல் ஹீரோ திட்டமா?
கல்வித் திட்டம் வகுப்பதென்ன
ஆர்எஸ்எஸ் இஷ்டமா? (கல்வி கொள்கையா)
-வரத.வசந்தராஜன்
நன்னிலம்
No comments:
Post a Comment