ஈனப்பிறவிகள் தந்திரத்தால்
இருட்டில் இயங்கும் எந்திரம் நான்!
மானம் பெரிதெனும் மேடைவாய்கள்
மாலையில் ஜெபிக்கும் மந்திரம் நான்!
கற்பை உயர்வெனக் கதையில் உரைக்கும்
தமிழ்க்குடி பெற்ற தலைமகள் நான்!
கருப்பை வழியே பிறந்த நாய்கள்
கடித்துக் குதறிய விலைமகள் நான்!
வேலை கேட்டுப் போன இடத்தில்
சேலை இழுத்தவர் எத்தனையோ?
மாலை சூட்ட தட்சணை கேட்டால்
மங்கையர் வாழ்வது எப்படியோ?படித்தக் கடனை கட்டும் முன்னே
படுக்கை விரித்தவர் எத்தனையோ?
பார்ப்பவர் எல்லாம் பாதகர் என்றால்
பத்தினி யாவது எப்படியோ?
(ஈனப்பிறவிகள்)
வறுமை விற்று வயிறு நிறைத்தேன்
உடலை விற்பதாய் ஊர்பேச்சு!
மாதம் மூன்றுநாள் உழைக்கா துண்பதே
உறுத்து கிறதுஎன் மனசாட்சி!
ஆலைக் கரும்பென ஆனதென் வாழ்க்கை
அனுதினம் பிழிபடும் சக்கை!
சேலை சுமையென எடுத்தெறி ந்தாலும்
இன்னும் மேனியில் வெக்கை! (ஈனப்பிறவிகள்)
புனிதம் பேசும் புண்ணிய வானே
தழும்புகள் எண்ணிப் பாரும்!
மனிதன் உருவில் திரியும் மிருகம்
எத்தனை என்பதைக் கூறும்!
தினமும் என்னை துகிலுரி ந்தாரே
ஆடை கொடுப்பவன் எங்கே?
சாதியும் மதமும் சபலத்துக் தில்லை
சமத்துவ மாகுது இங்கே?
(ஈனப்பிறவிகள்)
இரைப்பை மட்டும் திறந்து வைத்து
கருப்பை கதவை மூடினேன்
கொள்ளி வைக்கவும் பிள்ளை இல்லையே
கதியை எண்ணி வாடினேன்!
மரமாய் கிடப்பேன் கட்டில் மேலே
எத்தனை உருவம் தீண்டும்?
பிணமாய் விழுந்த பின்னா லேனும்
தனியாய் படுக்க வேண்டும்!
-வசந்தராஜன்
நன்னிலம்.
No comments:
Post a Comment