Tuesday, September 8, 2020

தாயே... மரித்தாயே

 வாடையிலும் கோடையிலும் 

என்னை வளர்த்த ஆத்தா- உன்னை 

பாடையில பாக்கணுமா 

விட்டு எழுந்து வாத்தா!

கவலையெதும் காட்டாம 

என்னை வளர்த்த ஆத்தா- இப்போ 

கலங்கிநின்னு தவிக்கிறனே 

கண்ணு துடைக்க வாத்தா!


நடைவண்டி ஓட்டும்போது 

நான் தடுக்கி விழுந்ததுக்கு

வண்டிசெஞ்ச ஆசாரியை

வசைமாரி பொழிஞ்சவ தான்- இப்போ 

சவவண்டி அலங்கரிச்சு

சந்து பக்கம் நிக்குதம்மா

சனஞ்சாதி நெறைஞ்சிருக்கு 

சத்தம் போட்டு திட்டுவியா!   (வாடையிலும்)


கணக்குப் பாடம் தெரியாம

கையில் அடிச்ச வாத்தியாரை 

கணக்கு வழக்கு இல்லாம 

கரிச்சிக் கொட்டி திரிஞ்சவ தான்- இப்போ 

மாரடிச்சு மாரடிச்சு 

மரத்துப் போன கைகளுக்கு 

மருதாணி வெச்ச கையால் 

மருந்து வைக்க வருவீயா?  (வாடையிலும்)


வாயைக்கட்டி வயித்தைகட்டி

சுருக்குப்பையில் சேர்த்து வெச்சு

வேணுமின்னு கேக்கும் முன்னே

வாய்க்குருசி கொடுத்தவ தான் -இப்போ

வாயைக்கட்டி காலைக்கட்டி 

வாழைமட்டை பத்தி வெச்சு

வாசம் விட்ட தேகத்துக்கு 

வாய்க்கரிசி போடணுமா? 

          (வாடையிலும்)


சொத்தைவிட்டு சொகத்தைவிட்டு 

சொந்த பந்தம் ஏசவிட்டு 

செத்துவிட்ட அப்பன்பெருமை

சொல்லிச் சொல்லி அழுதவதான்- இப்போ

ஒதுக்கிவெச்ச சொந்தமெல்லாம்

ஒசத்திவெச்சு பேசுதம்மா 

நேசம் வெச்ச‌ தாயுனக்கு

நெருப்பு வெக்க ஆனதம்மா! (வாடையிலும்)


-வரத.வசந்தராஜன்

  நன்னிலம்


No comments:

Post a Comment