வாடையிலும் கோடையிலும்
என்னை வளர்த்த ஆத்தா- உன்னை
பாடையில பாக்கணுமா
விட்டு எழுந்து வாத்தா!
கவலையெதும் காட்டாம
என்னை வளர்த்த ஆத்தா- இப்போ
கலங்கிநின்னு தவிக்கிறனே
கண்ணு துடைக்க வாத்தா!
நடைவண்டி ஓட்டும்போது
நான் தடுக்கி விழுந்ததுக்கு
வண்டிசெஞ்ச ஆசாரியை
வசைமாரி பொழிஞ்சவ தான்- இப்போ
சவவண்டி அலங்கரிச்சு
சந்து பக்கம் நிக்குதம்மா
சனஞ்சாதி நெறைஞ்சிருக்கு
சத்தம் போட்டு திட்டுவியா! (வாடையிலும்)
கணக்குப் பாடம் தெரியாம
கையில் அடிச்ச வாத்தியாரை
கணக்கு வழக்கு இல்லாம
கரிச்சிக் கொட்டி திரிஞ்சவ தான்- இப்போ
மாரடிச்சு மாரடிச்சு
மரத்துப் போன கைகளுக்கு
மருதாணி வெச்ச கையால்
மருந்து வைக்க வருவீயா? (வாடையிலும்)
வாயைக்கட்டி வயித்தைகட்டி
சுருக்குப்பையில் சேர்த்து வெச்சு
வேணுமின்னு கேக்கும் முன்னே
வாய்க்குருசி கொடுத்தவ தான் -இப்போ
வாயைக்கட்டி காலைக்கட்டி
வாழைமட்டை பத்தி வெச்சு
வாசம் விட்ட தேகத்துக்கு
வாய்க்கரிசி போடணுமா?
(வாடையிலும்)
சொத்தைவிட்டு சொகத்தைவிட்டு
சொந்த பந்தம் ஏசவிட்டு
செத்துவிட்ட அப்பன்பெருமை
சொல்லிச் சொல்லி அழுதவதான்- இப்போ
ஒதுக்கிவெச்ச சொந்தமெல்லாம்
ஒசத்திவெச்சு பேசுதம்மா
நேசம் வெச்ச தாயுனக்கு
நெருப்பு வெக்க ஆனதம்மா! (வாடையிலும்)
-வரத.வசந்தராஜன்
நன்னிலம்
No comments:
Post a Comment