Tuesday, September 8, 2020

சைவ காதல்

 காரட்டு நெறத்தழகி 

கத்தரிப்பூ சிரிப்பழகி 

சாரட்டு வண்டி பூட்டி வாரேன்டி- உன்னை

சம்மந்தம் பேசத் தான் போறேன்டி!


பூசணிக்காய் முகத்தழகி

புளியம்பிஞ்சு உதட்டழகி 

யோசனைக்கு காரணம் எதுதான்டி- நான் 

யோக்கியந்தான் சந்தேகம் உனக்கேன்டி!


கன்னத்தில் தக்காளி 

கண்ணுக்குள் குடைமிளகாய்

எண்ணத்தில் நிறைஞ்சவளே நீதாண்டி- உன்னை 

எப்படியும் மணமுடிக்கப் போறேன்டி!


பீர்க்கங்காய் கழுத்தழகி 

பீட்ரூட்டு மாரழகி

ஏக்கத்தை தீர்க்கத்தான் வாயேன்டி-  உன் 

இதயத்தில் இடமொன்னு தாயேன்டி! 


வெண்டைக்காய் விரலழகி

வெள்ளரிக்காய் கையழகி 

சண்டைக்கு இழுக்காதே பாவன்டி-நீ 

சாடையில சொல்லிபுட்டா பாய்வேன்டி!


சுரைக்காய் இடுப்பழகி 

சௌசௌ மடிப்பழகி

முறைச்சா நான் என்ன ஆவேன்டி- உன்னை 

மறந்தா மனசுக்குள் சாவேன்டி!


வாழைத்தண்டு காலழகி 

வாய்பிளக்கும் பேரழகி 

ஏழைக்கேத்த எள்ளுருண்டை நீதான்டி- உன்னை

எஜமானி ஆக்கத்தான் போறேன்டி!


-வரத.வசந்தராஜன்

  நன்னிலம்


No comments:

Post a Comment