Tuesday, September 8, 2020

பட்டாசு தொழிற்சாலை விபத்து

 

பயங்கர வெடி விபத்து- அதில்
பலபேர் உயிரிழப்பு
பலமுறை இப்படி காதுல கேட்டு
           பழகிடுச்சு நியூஸு- ஒன்னும்
           பதறலயே மனசு!

எரிந்தது எப்படி தீயறியும்
எதனால் என்பதை யாரறிவார்?

கந்தகத் துக்கும் பேரியத் துக்கும்
நடந்த கைகலப்போ? -இதில்
காப்பீட் டுக்காய் காரியத் துக்கம்
பூணும் சதியிருக்கோ?

ராக்கெட்டு போல உயரே‌ போகும்
ஆலை முதலாளி- பாம்பு
மாத்திரை போலே மண்ணில் கருகும்
கூலித் தொழிலாளி!

கந்தக வாடையில் கனவுகள் திரிக்கும்
கன்னிகள் எத்தனையோ?-வெடிக்
கட்டுகள் எண்ணி கணக்கு படிக்கும்
பிள்ளைகள் எத்தனையோ?

மத்தாப் பூவாய் சிரிக்க நினைத்த
ஏழைகள் கனவெல்லாம்
புஸ்வா னமாய் புகைந்து முடிந்து
போனது ஓர்நொடியில்!

சீனிச் சரமாய் நீளுது இன்னும்
வட்டிக் கடனெல்லாம் -தரைச்
சக்கரம் போல சுற்றிய வாழ்க்கை
சரிந்தது புவிமடியில்!

எத்தனை முறைஅந்த நெருப்பு குடிக்கும்
ஏழைகள் உயிரெல்லாம் -இருள்
கவிழ்ந்து கிடக்கும் குடிசைக் குள்ளே
ஈஒஎப்போ வரும்விடியல்?

வெடி மருந்தோடு வெடி மருந்தாக
சாம்பல் கலக்கிறதே -சனம்
வெந்து மடிந்த வீதியில் மீண்டும்
கட்டடம் முளைக்கிறதே!
            -வ.வசந்தராஜன்
            நன்னிலம்

No comments:

Post a Comment