பயங்கர வெடி விபத்து- அதில்
பலபேர் உயிரிழப்பு
பலமுறை இப்படி காதுல கேட்டு
பழகிடுச்சு நியூஸு- ஒன்னும்
பதறலயே மனசு!
எரிந்தது எப்படி தீயறியும்
எதனால் என்பதை யாரறிவார்?
கந்தகத் துக்கும் பேரியத் துக்கும்
நடந்த கைகலப்போ? -இதில்
காப்பீட் டுக்காய் காரியத் துக்கம்
பூணும் சதியிருக்கோ?
ராக்கெட்டு போல உயரே போகும்
ஆலை முதலாளி- பாம்பு
மாத்திரை போலே மண்ணில் கருகும்
கூலித் தொழிலாளி!
கந்தக வாடையில் கனவுகள் திரிக்கும்
கன்னிகள் எத்தனையோ?-வெடிக்
கட்டுகள் எண்ணி கணக்கு படிக்கும்
பிள்ளைகள் எத்தனையோ?
மத்தாப் பூவாய் சிரிக்க நினைத்த
ஏழைகள் கனவெல்லாம்
புஸ்வா னமாய் புகைந்து முடிந்து
போனது ஓர்நொடியில்!
சீனிச் சரமாய் நீளுது இன்னும்
வட்டிக் கடனெல்லாம் -தரைச்
சக்கரம் போல சுற்றிய வாழ்க்கை
சரிந்தது புவிமடியில்!
எத்தனை முறைஅந்த நெருப்பு குடிக்கும்
ஏழைகள் உயிரெல்லாம் -இருள்
கவிழ்ந்து கிடக்கும் குடிசைக் குள்ளே
ஈஒஎப்போ வரும்விடியல்?
வெடி மருந்தோடு வெடி மருந்தாக
சாம்பல் கலக்கிறதே -சனம்
வெந்து மடிந்த வீதியில் மீண்டும்
கட்டடம் முளைக்கிறதே!
-வ.வசந்தராஜன்
நன்னிலம்
No comments:
Post a Comment